தக்காளி தோட்டத்தில் சன்னி லியோன்.. கூடவே இருந்த இன்னொரு நடிகை.. கர்நாடகா விவசாயி செய்ததை பாருங்க
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தக்காளி தோட்டத்துக்குள் நடிகைகள் சன்னி லியோன் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோரின் போட்டோக்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் அந்த தோட்டத்து விவசாயி ஏன் நடிகைகளின் போட்டோ எதற்காக தக்காளி தோட்டத்துக்குள் வைத்தார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
வயல் மற்றும் தோட்டங்களில் பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் உரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுதவிர அவ்வப்போது விவசாய தொழிலாளர்களை வைத்து களை எடுத்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படி பராமரித்த விவசாய செடிகள் ஒரு கட்டத்தில் நல்ல பலனை தரும். இந்த சமயத்தில் பறவைகள் வந்து அதனை தின்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும் சிலர் கண்திருஷ்டியால் விளைச்சல் சரியும் என நம்புகின்றனர். இதனை தடுப்பதற்காக விவசாயிகள் கையில் எடுப்பது தான் திருஷ்டி பொம்மை.
அதாவது விளைச்சல் மிக்க தோட்டம், வயல்களில் ஆங்காங்கே திருஷ்டி பொம்மைகளை விவசாயிகள் வைப்பது இன்றும் தொடர்கிறது. இதன்மூலம் மக்களின் கண்வைத்தாலும் விளைச்சல் குறையாது எனவும், திருஷ்டி பொம்மை மனிதர்களை போல் இருப்பதால் பறவைகள் தோட்டத்துக்கு வருவதும் குறையும் என்று நம்புகின்றனர். இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஒரு விவசாயி மாற்றி யோசித்துள்ளார். அவர் என்ன செய்தார்? வாங்க பார்க்கலாம்.
கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஹன்டிகநாலா கிராமத்தை சேர்ந்தவர் தீபக். இவர் 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தற்போது தக்காளி செடிகள் நன்கு பூத்துள்ளன. இத்தகைய சூழலில் தான் அவர் தோட்டத்தில் 2 திருஷ்டி பொம்மைகளை வைத்துள்ளார். பொதுவாக திருஷ்டி பொம்மையில் யாருடைய போட்டோவும் இருக்காது.

ஆனால்தீபக் தனது தோட்டத்தில் நடிகைகள் சன்னி லியோன் மற்றும் கன்னட நடிகை ரச்சிதா ராம் ஆகியோரை திருஷ்டி பொம்மைகளாக மாற்றி உள்ளார். அதாவது இருவரின் போட்டோவையும் அவர் தனது தக்காளி தோட்டத்துக்கு நடுவே மாட்டி வைத்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களின் திருஷ்டி கழியும் எனவும், தோட்டத்தில் ஆட்கள் இருப்பதாக நினைத்து பறவைகள் வராமல் இருக்கும் எனவும் தீபக் நம்புகிறார்.
இந்நிலையில் தான் நடிகைகள் சன்னி லியோன் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோரின் போட்டோக்கள் தக்காளி தோட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications