ஒரு முறை இருமுறை அல்ல.. என்னை 91 முறை அவமதித்த காங்கிரஸ்..கர்நாடகாவில் பிரதமர் மோடி ஹெவி அட்டாக்
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தம்மை 91 முறை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி தலைவர்கள் முகாமிட்டு கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா, பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி பிரசாரக் கூட்டங்களில் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை இழிவாகப் பேசிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை இழிவு செய்யும் போது காங்கிரஸ் கட்சிதான் அழிந்து போகிறது. என்னை காங்கிரஸ் அவதூறாக பேசும் போது அதை நான் பரிசாகவே ஏற்றுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியினர் என்னை மட்டுமல்ல. அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்துகின்றனர். வீர சாவர்க்கரை இழிவுபடுத்துகின்றனர். கர்நாடகா மக்கள், பாஜக மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. ஆகையால் மே 10-ந் தேதி தேர்தலின் போது மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்க உள்ளனர்.

பசவண்ணாவின் போதனைகளை காங்கிரஸ் கட்சி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கரையும் அப்படித்தான் காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் பாடுபடவும் இல்லை. கர்நாடகாவில் பல தலைமுறைகளுக்குப் பின்னரே முதல் முறையாக 9 லட்சம் பேர் வீடுகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கர்நாடகாவில் பிரசாரம் செய்த பாஜக தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் மீது கர்நாடகா மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. கர்நாடகாவில் செயல்படும் இரட்டை இன்ஜின் அரசுக்குதான் மக்கள் ஆதரவு தருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications