மூடாவை தூக்கி ஓரம் போடுங்க.. கொரோனா நிதியில் பெரிய முறைகேடு! பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூர்: கர்நாடகாவில் சமீப நாட்களாக மூடா முறைகேடு பஞ்சாயத்து சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், பாஜக ஆட்சியில் கொரோனா நிதியை கையாண்டதில் நூற்றுக்கணக்கான கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (மூடா) மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம்தான் கார்நாடகாவையே கடந்த சில நாட்களாக உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில், இதற்கு எதிராக காங்கிரஸ், பாஜக மீது மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

எடியூரப்பா ஆட்சி காலத்தில், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு கர்நாடகா மாநில அரசு நிதியை ஒதுக்கியிருந்தது. மொத்தமாக ரூ.13,000 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் ரூ.1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து, முதல்வர் சித்தராமையா மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இந்த அறிக்கை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் செய்யப்பட்டிருப்பதாகவும், செலவு குறித்த கோப்புகள் சில காணாமல் போக செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.
குன்ஹா தலைமையிலான குழு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே அமைக்கப்பட்டது என்பதால், குழு கொடுத்த அறிக்கையை சீரியஸாக பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. தற்போது கொடுத்திருப்பது இடைக்கால அறிக்கைதான். இதனை இறுதி செய்து, முழு அறிக்கையாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் தாக்கல் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
மூடா விஷயத்தில் காங்கிரஸ் அரசை குடைந்துக்கொண்டிருந்த பாஜகவுக்கு, இது சரியான பதிலடியாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல மூடா விஷயத்தில் விசாரணைக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி கொடுத்திருந்தார். அப்படி இருக்கையில், கோவிட் நிதி முறைகேடு புகாருக்கும் விசாரணைக்கு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications