கர்நாடகா முதல்வராகும் சித்தராமையா? இன்றே அறிவிக்கும் காங்கிரஸ்.. டிகே சிவக்குமாருக்கு ‛நோ சான்ஸ்’
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாருக்கு பதில் சித்தராமையாவை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதோடு இன்றே அறிவிப்பு வெளியாக உள்ளதாக பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் காங்கிரஸ் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 66 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி உடனடியாக ஆட்சி அமைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று இருவரும் மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசினார். மேலும் சித்தராமையா கேசி வேணுகேபாலை சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று சித்தராமையா ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்நிலையில் தான் மீண்டும் மல்லிகார்ஜூ ன கார்கே தலைமையில் ராகுல் காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால், சித்தராமையா, டிகே சிவக்கமார் ஆகியோருடன் மீட்டிங் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கு பிறகு கர்நாடகா முதல்வர் யார்? என்பது பற்றிய அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் வெளியிட உள்ளது. அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரை பெயரை தான் கட்சி மேலிடம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளதாக கூறுகிறது.
அதோடு காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவக்குமாரை சமாதானம் செய்யவும் உள்ளனர். அதாவது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். அதோடு அமைச்சரவையில் துணை முதல்வர் மட்டுமின்றி முக்கிய 2 துறைகளையும் தருவதோடு ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும் கட்சி மேலிடம் அவரை சமாதானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் நாளையே பெங்களூர் கண்டீரவா மைாதனத்தில் பதவி பிரமாணம் செய்வதாகவும், அதன்பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கடந்த 4 நாட்களாக கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்புக்கு இன்று காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் பெங்களூர் குமாரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையாவின் வீட்டுக்கு இன்று திடீரென்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கர்நாடகா ஆயுதப்படை போலீசார் உள்பட ஏராளமானவர்கள் அவரது வீட்டு முன்பு குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications