நாளை சட்டசபை வராவிட்டால், கட்சி தாவல் சட்டம் பாயும்.. காங். எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவு
பெங்களூர்: வெள்ளிக்கிழமை, சட்டசபை வராவிட்டால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபை காங்கிரஸ் தலைமை கொறடா கணேஷ் ஹுகேரி இன்று ஒரு விப் உத்தரவை பிறப்பித்துள்ளார். அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த விப் உத்தரவில் கூறியுள்ளதாவது:

நிதி மசோதா மற்றும் பிற விஷயங்களை நிறைவேற்ற நாளைய சட்டசபை அமர்வில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், அந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் என அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதில் 10 எம்எல்ஏக்கள், இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். மற்றவர்கள் மும்பை ஹோட்டல்களில் உள்ளனர். அவர்கள் நாளை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காவிட்டால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சபாநாயகரை சந்தித்த 10 பேரும்கூட, மீண்டும், மும்பை செல்ல வாய்ப்புள்ளது. அப்படியானால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
கொறடா உத்தரவை மீறியதற்காக, எம்எல்ஏக்கள் பதவி கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், கூட்டணி ஆட்சி தப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விப் உத்தரவு, கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications