மாட்டிகினாரு ஒர்த்தரு.. அவர காப்பாத்தனும்.. சித்தராமையா ராஜினாமா செய்ய காங்கிரசுக்குள்ளேயே எழும் குரல்
பெங்களூர்: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டிய அழுத்தத்தில் உள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அவரது சொந்த கட்சியான காங்கிரஸிலும் இருந்து வருகிறது.
ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் சட்டசபை சபாநாயகராகவும் இருந்த அனுபவமிக்க அரசியல்வாதியான கே.பி.கோலிவாட், கட்சிக்கு மேலும் அவமானம் ஏற்படாமல் இருக்க சித்தராமையாவை பதவி விலகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

"இந்தப் பிரச்சினையை அவர் தீர்த்து வைத்தவுடன் அவர் மீண்டும் முதலமைச்சராகத் தொடரலாம்... இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்" என்று கோலிவாட் கூறினார்.
"இரண்டு தீர்ப்புகள் உள்ளன... ஒன்று உயர்நீதிமன்றம், மற்றொன்று மக்கள் நீதிமன்றம். இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தச் சூழலை சாதகமாக்கிக் கொள்கின்றன. நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் இது குறித்து உரையாற்றினார்" என்று கோலிவாட் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையை தவிர்க்க, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தை அவர் தீர்த்து வைத்தவுடன், அவர் பதவிக்கு திரும்பி வரலாம்... எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கு அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவு உள்ளது என்றும் கோலிவாட் தெரிவித்தார்.
கேபி கோலிவாட் காங்கிரஸின் மாநில ஒழுங்குமுறைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் சித்தராமையா பதவி விலக கோரிக்கைவிடுத்தன.












Click it and Unblock the Notifications