பெங்களூர்.. கொரோனாவிலும் கொடுமை.. பணம் தந்தால்தான் மருத்துவமனையில் பெட்.. அதிகாரிகள் மோசடி அம்பலம்
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கும் விஷயத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆளும் பாஜகவை சேர்ந்த லோக்சபா உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் சட்டசபை உறுப்பினர் சதீஷ் ரெட்டி ஆகியோர் நேரடியாக "வார் ரூம்" சென்று ஆய்வு நடத்தி இந்த அவலத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ மண்டல வாரியாக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மண்டலத்தை சேர்ந்த நோயாளிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் படுக்கை ஒதுக்கப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக எந்த நோயாளி போன் செய்து படுக்கை இருக்கிறதா என்று கேட்டாலும் முழுமையாக நிரம்பி விட்டது என்பதுதான் பதிலாக வந்து கொண்டிருக்கிறது . எப்போது காலியாகுமோ அப்போது பெட் தருகிறோம், அதுவரை காத்திருங்கள் என்று அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்து உயிருக்கு நோயாளி போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட இதுபோன்ற பதில் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தெற்கு பெங்களூர் லோக்சபா உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா மற்றும் பொம்மனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சதீஷ் ரெட்டி இன்று ஆய்வு செய்து இதை அம்பலப்படுத்தியுள்ளனர். அப்போது எந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருக்கிறது, ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கை வசதி எத்தனை இருக்கிறது, எத்தனை பெட் பிளாக் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வு செய்துள்ளனர். அப்போது நோயாளிகளிடம் லட்சக்கணக்கான பணம் பெற்றுக் கொண்டு பணம் தருபவர்களுக்கு மற்றும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
Bribe for BBMP quota hospital bed booking unearthed by BJP MP Tejasvi surya and BJP MLAs. BBMP officials took money to block beds for which govt paid for treatment. All beds were booked and showed scarcity. MLAs and MP to meet CM and complaint against BBMP officials. pic.twitter.com/qjOgIDyDtm
— Nagarjun Dwarakanath (@nagarjund) May 4, 2021
மொத்தம் மூன்று மாநகராட்சி அதிகாரிகள் தெற்கு மண்டலத்திலுள்ள வார் ரூம் மையத்தில் இது போன்ற முறைகேடு வேலையில் ஈடுபட்டது அம்பலமானது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அங்கு வருகை தந்திருந்த போலீஸ் துணை கமிஷனரை தேஜஸ்வி சூர்யா கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், இரவு 12 மணிக்கு பெட் புக்கிங் செய்து, முறைகேடு நடந்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்று கூறிவிட்டு, ஆயிரக்கணக்கான பணம் பெற்றுக் கொண்டு சாதாரண நோயாளிகளுக்கு சீ்ட் ஒதுக்குகிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படுவோர் செத்து மடிகிறார்கள். இது கொலையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீட்டில் இருந்து கொண்டு சிகிச்சை பெறுபவரின் பெயரில் பெட் புக் செய்யப்பட்டு பணம் கொடுத்தவருக்கு அது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . ஆனால் பெட் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பெட் ஒதுக்கப்படவில்லை. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.