திடீரென்று ஓடிய ஆபாசபடம்.. கர்நாடகா உயர்நீதிமன்ற காணொலி விசாரணை நிறுத்தம்.. பின்னணியில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் விசாரணையின்போது திடீரென்று ஆபாசபடம் ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கர்நாடா உயர்நீதிமன்றம் பெங்களூர் விதானசவுதாவின் எதிரே அமைந்துள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரசன்னா பி வரலே உள்ளார். இங்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற விசாரணை மற்றும் நடவடிக்கைள் நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது கொரோனா பரவலுக்கு பிறகு நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) மூலம் வழக்கு விசாரணை தொடங்கியது. அதனடிப்படையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இந்த நடைமுறை 2022 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
மேலும் வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் யூ-டியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் தலைமை நீதிபதி பிரசன்ன பி வரலே தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்தது. அப்போது அது காணொலி காட்சி மூலம் லைவ் வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த வேளையில் திடீரென்று வழக்கு விசாரணை தொடர்பான நடைமுறைகளுக்கு பதில் திரையில் ஆபாசபடம் ஓடியது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக காணொலி காட்சி லைவ் வீடியோ ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது யாரோ காணொலி காட்சி செயலிக்கான தொழில்நுட்பத்தை முடக்கி ஆபாசபடத்தை ஓடவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணையை நேரடியா ஒளிபரப்புவதை உயர்நீதிமன்றம் நிறுத்தி உள்ளது.
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் இந்த நேரடி ஒளிபரப்பு செய்யும் முறை என்பது நிறுத்தப்படுகிறது. மக்கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ள நாங்கள் இந்த வசதியை வழங்கினோம். ஆனால் தொழில்நுட்பம் சார்ந்து பிரச்சனை ஏற்படுவதால் நிறுத்தப்படுகிறது என்று கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே வாய்மொழியாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications