தும்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தேவகவுடா… காங்கிரஸ் எம். பி மிரட்டலால் மீண்டும் குழப்பம்
பெங்களூர்: மஜத கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கர்நாடகாவின் தும்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி போட்டி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் மக்களவை தேர்தலிலும் இரு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்குவதில் தொடங்கி, கோஷ்டி பூசல், போட்டி வேட்பாளர் என்று பல பிரச்னைகளை கடந்து ஒரு வழியாக இரு கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின.

தும்கூர் தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்பட்டாலும், தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கும் காங்கிரசைச் சேர்ந்த முட்டஹனுமே கவுடா, தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மாநில தலைமை இறங்கியுள்ளது.
தேவகவுடா மார்ச் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார், காங்கிரஸ், ஜனததளம் எஸ் கட்சியினர் அப்போது உடனிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அங்கு காங்கிரஸ் எம்.பி இருக்கும் போது சீட்டை தேவ கவுடாவுக்கு தாரை வார்த்தது அந்தத் தொகுதி காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் தும்கூரில் பசவராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications