நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம்- தேவகவுடா பரபரப்பு பேச்சு
பெங்களூர்: அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில் நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யாரென்று முடிவெடுக்கப்படவில்லை. ராகுலை பிரதமராக்க ஒரு சில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி முக்கியமல்ல, பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என கூறிவிட்டது.
காங்கிரஸ் கட்சி
இதுகுறித்து கர்நாடகத்தில் காங்கிரஸின் கூட்டணி கட்சியாக உள்ள மஜதவின் தேவகவுடா கூறுகையில் காங்கிரஸின் ஆதரவின்றி எந்த மாநில கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸுக்கு ஆதரவு வலுப்பெற்றுள்ளது.
23-ஆம் தேதி
எனவே இதுகுறித்து நாம் உட்கார்ந்து பேசி ஆலோசனை நடத்த வேண்டும். இதற்கான ஒரு சூழலை வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்யவுள்ள ஆலோசனை கூட்டம் தரும் என எதிர்பார்க்கிறோம். இதில் பாஜகவை வெளியேற்ற எதிர்க்கட்சிகளின் பிரதமர் யார் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.
முக்கியத்துவம்
அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என தேவகவுடா தெரிவித்துள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேவகவுடா முடிவு
மூன்றாவது அணிக்கு ஆதரவு கோரி டிஆர்எஸ், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்திருந்த நிலையில் 3-ஆவது அணிக்கு ஆதரவில்லை என்பதை போல் தேவகவுடாவின் கருத்து அமைந்துள்ளது.