தர்மஸ்தலா வழக்கில் பெரிய சதி நடந்துள்ளது.. சொல்வது கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் கொன்று புதைக்கப்பட்டடிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர், கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல உடல்களை ரகசியமாக புதைத்ததாகக் கூறியிருந்தார். இது கர்நாடகா முழுவதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், முன்னாள் சுகாதார பணியாளரின் வாக்குமூலம் குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த வழக்கே திட்டமிட்ட சதி என்று சிவக்குமார் விமர்சித்துள்ளார்.
"இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் கோயிலை களங்கப்படுத்த நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தை கெடுக்க அவர்கள் வந்துள்ளனர்.
சுகாதார பணியாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்றத்தில் இதை விவாதித்தது. தவறாக வழிநடத்துபவர்கள் மற்றும் அவதூறு பரப்புபவர்களை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கூட பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உள்துறை அமைச்சரும் இந்த முழு வழக்கின் விவரங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அங்கு என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அது ஒரு வெற்றுப் பெட்டி" என்று கூறியிருக்கிறார்.
தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், "முன்னாள் சுகாதார ஊழியரின் நோக்கங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதை பூதாகரமான விஷயம் போல அவர் ஊதி பெரியதாக மாற்றினார். இது குறித்த உண்மையை விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications