துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டினேனா? வந்து விழுந்த கேள்விக்கு சிவக்குமார் பரபர பதில்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா 5 ஆண்டு நீடிப்பார் என அவரது ஆதரவு அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தியடைந்த டிகே சிவக்குமார் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு ஆட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து டிகே சிவக்குமார் பரபரப்பான விளக்கத்தை வழங்கி உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. இதன்மூலம் மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து முதல்வர் பதவிக்கான ரேஸ் தொடங்கியது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.
இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வாகினர். இவர்கள் 2 பேரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றனர். இவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாகினர். இதற்கிடையே தான் முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாரும் முதல்வராக தொடர்வார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தான் சித்தராமையாவின் ஆதரவாளரும், அமைச்சருமான எம்பி பாட்டீல், ‛‛சித்தராமையா தான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார். முதல் இரண்டரை ஆண்டு ஒருவர், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர் முதல்வராக இருப்பார் என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவிப்பார்'' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக டிகே சிவக்குமார் ஆக்ரோஷமடைந்து மேலிட தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசியதாக தகவல்கள் பரவியது.
அப்போது, ‛‛சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வர் என்று கூற எம்பி பாட்டீல் யாரு? அவர் என்ன மேலிட தலைவரா? இல்லை காங்கிரஸ் தலைவரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எம்பி பாட்டீல் அப்படி கூறியுள்ளார்? இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்ந்தால் நான் அரசில் இருந்து விலகி இருக்க தயார். இதுபோன்ற பேச்சுகளைக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகி இருக்கவும் தயாராக இருக்கிறேன்'' என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் இது வரும்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே தான் சம்பவம் குறித்து டிகே சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது மல்லிகார்ஜூன கார்கேவை தொடர்பு கொண்டு பேசினீர்களா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிகே சிவக்குமார், ‛‛அது எல்லாம் பொய்'' என கூறியபடி சென்றார். மேலும் அவர் கூறுகையில், ‛‛தற்போது மக்களுக்கு வழங்கிய 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மக்கள் விருப்பத்துக்கேற்ப காங்கிரஸ் கட்சி செயல்படும். கட்சியில் தற்போது தலைவர், பொதுச்செயலாளர், முதல்வர் இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எம்பி பாட்டீலை நானும் எனது தம்பி டிகே சுரேசும் தொடர்பு கொண்டு பேசவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications