காரில் தனியாக சென்றால் வரியா? பெங்களூரில் அமலுக்கு வருகிறதா? குட்நியூஸ் சொன்ன டிகே சிவக்குமார்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் காரில் தனியாக சென்றால் நெரிசல் வரி (Cogestion Tax) அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் அமைச்சருமான டிகே சிவக்குமார் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. உலகிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 3வது இடத்தில் உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெங்களூரில் நெரிசல் வரி (cogestion tax) வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி, பெங்களூரில் அவுட்டர் ரிங்ரோடு உள்பட முக்கியமான சாலைகளில் Peak hours-ல் கார்களில் தனியாக பயணம் செய்வோருக்கு தனியாக வரி விதிக்கப்படும். இந்த வரி ரூ.100 முதல் ரூ.500 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் வரி கட்ட பயந்து பலரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மாநில அரசு நினைப்பதாக செய்திகள் வெளியானது.
இருப்பினும் அரசின் இந்த திட்டம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் கொந்தளிக்க தொடங்கினர்.
இப்படியான சூழலில் தான் Cogestion Tax பற்றி டிகே சிவக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. டிகே சிவக்குமார் கர்நாடகா துணை முதல்வராகும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சராகவும் உள்ளார். இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛பெங்களூரில் Cogestion Tax வசூலிக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் பொய்யானது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications