விஜய்யிடம் சரணடைந்த டிகே சிவக்குமார்! மெச்சூரிட்டி இல்லைனு சொல்லிவிட்டு இப்போது அந்தர் பல்டி.. வீடியோ பாருங்க
சென்னை: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், ''விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால் தற்போது விஜய் தேர்தலில் வென்று முதல்வராகி உள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் கூட்டணியில் சேர்ந்து நிலையில் டிகே சிவக்குமார் விஜய்க்கு போன் போட்டு பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் டிகே சிவக்குமார் என்ன சொன்னார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் கூட திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்களின் ஆதரவில் விஜய் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக தேர்தலில் 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கைகோர்த்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியினருக்கு 2 அமைச்சர் பதவியை விஜய் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்யிடம் பேசிய டிகே சிவக்குமார்
இந்நிலையில் தான் கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமார், விஜய்க்கு போன் செய்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் விஜய்க்கு செல்போனில் பேசி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் டிகே சிவக்குமார், ''குட் ஈவினிங் விஜய்.. வாழ்த்துகள்.. நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். எல்லோரையும் ஒன்றாக வைத்து கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏனென்றால் இளைஞர்கள் மிகுந்த உணர்வுபூர்வமான ஈடுபாடுகளையும், லட்சியங்களையும் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரித்து ஒன்றிணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
Spoke with Tamil Nadu Chief Minister Thiru Vijay and conveyed my congratulations. I extend my best wishes to him and look forward to continued cooperation for the progress and welfare of our states.@TVKVijayHQ pic.twitter.com/by5O8TveGr
— DK Shivakumar (@DKShivakumar) May 14, 2026
உங்களுடன் இருக்கிறோம்
நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள். எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், ஆதரவையும் உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சிப்போம். இரு மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காகவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
முன்பு நடந்தது என்ன?
முன்னதாக தேர்தல் சமயத்தில் டிகே சிவக்குமார், விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது விஜய் நெல்லை, தூத்துக்குடியில் பிரசாரம் செய்தபோது, ''திமுக தனது கூட்டணியில் காங்கிரஸை வைத்துள்ளது. சில கோடிகளை கொடுத்து அந்த கட்சியை திமுக தக்கவைத்துள்ளது. இருப்பினும் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது" என்று கூறியிருந்தார். இதுபற்றி கேட்டதற்கு டிகே சிவக்குமார் காட்டமாக பதிலளித்தார்.
அதாவது டிகே சிவக்குமார் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட டிகே சிவக்குமார், விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்ததார். இதுபற்றி டிகே சிவக்குமார், ''அரசியலில் விஜய்க்கு முதிர்ச்சி இல்லை. அவருக்கு மெச்சூரிட்டி இல்லை. விஜய் உடன் டிஎம்சி கட்சி வேண்டுமானல் இருக்கலாம். நாங்கள் அவருடன் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் உள்ளது. இந்த கூட்டணி 3ல் இரண்டு பங்கு வென்று மெஜாரிட்டியை பிடிக்கும்'' என்றார்.
ஆனால் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், கர்நாடகா துணை முதல்வராகவும் இருக்கும் டிகே சிவக்குமார் விஜய்க்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாக, முதல்வர் விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் என்பதும், விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications