கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
பெங்களூர்: கர்நாடகாவில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் நாளை நடைபெறுகிறது. கர்நாடகா தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் ஒக்கலிகா கவுடா (வொக்கலிகா) ஜாதியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடா குடும்பம், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் குடும்பம் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் 2-வது கட்டமாக நாளை 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் கர்நாடகாவின் 14 தொகுதிகளும் அடங்கும். கர்நாடகாவில் நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் பெரும்பாலானவை அம்மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடாக்களை அதிகமான வாக்காளர்களாகக் கொண்ட தொகுதிகளாகும்.

ஜாதிகளுக்கு முக்கியத்துவம்: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 9 லிங்காயத் ஜாதி வேட்பாளர்களையும் 4 ஒக்கலிகா கவுடாக்களையும் 3 பிராமணர்களையும் பாஜக நிறுத்தி உள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் 2 ஒக்கலிகா கவுடாக்களை வேட்பாளர்களாக களத்தில் இறக்கி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 7 ஒக்கலிகா கவுடாக்களையும் 5 லிங்காயத்துகளையும் 6 இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. தனித் தொகுதிகளில் தலித்துகளில் சாலவாதி பிரிவினரை வேட்பாளர்களாக காங்கிரஸ் களமிறக்கி உள்ளது. 6 இதர பிற்படுத்தப்பட்டோரில் 2 பேர் குருபா ஜாதியை சேர்ந்தவர்கள்.
கர்நாடகா அரசியல்: கர்நாடகா அரசியலைப் பொறுத்தவரை பாஜகவின் வாக்கு வங்கியாக லிங்காயத் ஜாதிகள் உள்ளனர். மற்றொரு பெரும்பான்மை ஜாதியான ஒக்கலிகா கவுடாக்கள், ஜேடிஎஸ்-ன் வாக்கு வங்கியாக இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் டிகே சிவகுமார் தலையெடுத்த பின்னர் இந்த நிலைமை மாறத் தொடங்கிவிட்டது. ஒக்கலிகா கவுடா வாக்குகளை ஜேடிஎஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுவதில் கணிசமான வெற்றியை டிகே சிவகுமார் பெற்றிருக்கிறார் என்பதை சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருந்தன.
3 தொகுதிகள்: தற்போதைய லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடும் மண்டியா, தேவகவுடா பேரன் பிரஜ்வல் போட்டியிடும் ஹாசன், டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ்- தேவகவுடா மருமகன் டாக்டர் மஞ்சுநாத் மோதும் பெங்களூர் ரூரல் ஆகிய லோக்சபா தொகுதிகள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
பெங்களூர் ரூரல்: ஒக்கலிகா கவுடாக்கள் அதிகமாக உள்ள, தேவகவுடா குடும்பம் செல்வாக்கு செலுத்துகிற ராம்நகர், பெங்களூர் நகர்ப்புறம், தும்கூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. குனிகல், ராஜராஜேஸ்வரி நகர், பெங்களுரு தெற்கு, அனேகல், மாகடி, ராம்நகர், கனகபுரா, சன்னபட்னா ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. மொத்தம் 8 தொகுதிகளில் காங்கிரஸ் 5-ல் வென்றது. கனகபுராவில் டிகே சிவகுமார் வென்றார். பாஜக 2-ல் வென்றது. சன்னபட்னாவில் ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமி வென்றார். பெங்களூர் ரூரல் தொகுதியில் 70% பேர் ஒக்கலிகா கவுடாக்கள். 15% முஸ்லிம்கள். 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியின் தேவகவுடா மகன் குமாரசாமி வென்று எம்பியானார். 2013-ம் ஆண்டு முதல் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் எம்பியாக இருந்து வருகிறார். தற்போது 2024 தேர்தலில் டிகே சுரேஷ் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். அவருக்கு எதிராக பாஜக வேட்பாளராக தேவகவுடா மருமகன் டாக்டர் மஞ்சுநாத் போட்டியிடுகிறார்.
மண்டியா: ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் லோக்சபா தொகுதி. காவிரி நதிநீர் பிரச்சனையின் மையப்புள்ளியாக் இருக்கும் தொகுதி. முன்னாள் முதல்வர் குமாரசாமி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால் 2019 தேர்தலில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி இங்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நிகில் குமாரசாமி 41.89% வாக்குகள் பெற்றார். சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதா அம்பரீஷ் 51.02% வாக்குகள் பெற்று வென்றார். 2018 மண்டியா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி
63.79% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2014-ல் ஜேடிஎஸ் கட்சி 43.95%; காங்கிரஸ் கட்சி 43.49% வாகுகளைப் பெற்றிருந்தன. 2013 இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 51.36%; ஜேடிஎஸ் 44.19% வாக்குகளைப் பெற்றன. தற்போது முன்னாள் முதல்வர் குமாரசாமி இங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தொழிலதிபர் ஸ்டார் சந்துரு என்ற வெங்கடரமனா கவுடா களமிறக்கப்பட்டுள்ளார்.
ஹாசன் தொகுதி: ஹாசன் லோக்சபா தொகுதி: தேவகவுடா குடும்பம் செல்வாக்கு செலுத்தும் தொகுதிகளில் ஒன்று ஹாசன். தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா குடும்பத்துக்கு 'பாத்தியப்பட்டதாக' எழுதப்படாத பங்கீடு கொண்டது. 1991, 1998, 2004, 2009, 2014 தேர்தல்களில் தேவ கவுடா போட்டியிட்டு வென்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தேவ கவுடா பேரனும் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டு வென்றார். தற்போது மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஸ்ரேயாஸ் பட்டேல் களம் காண்கிறார். ஒக்கலிகா கவுடா ஜாதியினரிடையே செல்வாக்கு செலுத்தப் போவது தேவகவுடா குடும்பமா? டிகே சிவகுமார் குடும்பமா? என்பதற்கான விடையை ஜூன் 4-ல் சொல்லப் போகிறது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள்.












Click it and Unblock the Notifications