பெங்களூர் சாலைக்கு சரோஜா தேவி பெயர்.. பின்னணியில் இருக்கும் நபர் இவர்தான்
பெங்களூர்: அபிநய சரஸ்வதி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த நடிகை சரோஜா தேவி அண்மையில் மறைந்தார். சரோஜாதேவியின் பெயரை என்றும் நினைவுகூரும் வகையில் பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூர் சாலைக்கு சரோஜா தேவி பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அபிநய சரஸ்வதி என்று கன்னட மக்களாலும், கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் சரோஜா தேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரோஜாதேவி. சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என பல்வேறு விருதுகளை தனது நடிப்புத் திறமையால் குவித்தவர். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோக்களுடன் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி மறைவு திரைத் துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சரோஜாதேவியை நினைவுகூரும் வகையில் பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: பல மொழிகளில் நடித்த நடிகை சரோஜாதேவியின் மறைவு திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கன்னட மக்களால் அபிநய சரஸ்வதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர். புகழ்பெற்ற நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், என்டிஆர், திலீப்குமார், ராஜ்குமார் என ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ளார். சரோஜா தேவி தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்தவர். சினிமாவில் மட்டுமல்ல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முறையில் வாழ்ந்தவர்.
நடிகை சரோஜா தேவி அவர்களை நான் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். எல்லோருடனும் அன்பாகப் பழகும், பெரிய பண்பு கொண்டவராவர். அவரது நடிப்பில் வெளியான கித்தூர் ராணி சென்னம்மா, மல்லம்மன பவாட உள்ளிட்ட படங்களை நான் பார்த்துள்ளேன். அவருடைய இழப்பு திரைத் துறையினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை சரோஜாதேவியின் வீடு அமைந்துள்ள மல்லேசுவரம் 11 ஆவது கிராஸ் சாலை பகுதிக்கு அவருடைய பெயரை சூட்டுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியுள்ளதாவது: கன்னடம் உள்பட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அவருடைய இறுதிச் சடங்கிற்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் பலரும் வந்திருக்கின்றனர். நடிகை சரோஜா தேவியின் பெயர் என்றும் மறையாத அளவிற்கு நம் மாற்ற வேண்டும்.
பெங்களூரில் உள்ள சாலைக்கு சரோஜா தேவியின் பெயரை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ யோகஸ்வர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, பெங்களூர் மாநகராட்சி மற்றும் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திடம் பரிசீலனை செய்து சாலைக்கு சரோஜாதேவியின் பெயர் வைக்கப்படும்.
நான் முதல்முறையாக அமைச்சராக இருந்தபோது நான் சரோஜாதேவியை சந்தித்தபோது, என்னை சினிமாவுக்குள் வர வேண்டும் என்று கூறினார். ஆனால், நான் சினிமாவிற்குள் போகவில்லை. அவர் எல்லோருடனும் நன்றாக பழகக்கூடியவர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications