91 முறை அவதூறா?பயப்படாதீங்க பிரதமரே! மோடிக்கு, அண்ணன் ராகுலை சுட்டிக்காட்டி பிரியங்கா அட்வைஸ்.. ஆஹா
பெங்களூர்: காங்கிரஸ் கட்சி தன்னை பற்றி 91 முறை அவதூறு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்ட நிலையில் அதற்கு ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதோடு பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம் பயப்பட வேண்டாம் எனக்கூறி பிரதமர் மோடிக்கு அட்வைஸ் வழங்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேலும் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஏராளமான தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு

இதனால் கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் கதக்கில் மல்லிகார்ஜூன கார்கே பேசியது சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பு போன்றவர் என அவர் கூறியது பெரும் விவாதத்தை எழுப்பியது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதிலடி கொடுத்தார். பீதரில் நடந்த வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‛‛காங்கிரஸ் கட்சி என்னை பற்றி 91 முறை அவதூறு செய்துள்ளது'' என கூறினார். தற்போது பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் இடையே பெரும் வார்த்தை போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கர்நாடகாவில் பாகல்கோட்டையில் நடந் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
‛‛பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சி 91 முறை தவறாகவும், அவதூறாகவும் பேசியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். மாறாக நீங்கள்(பிரதமர் மோடி) எங்கள் குடும்பங்களுக்கு செய்த அவதூறுகள் தொடர்பாக நாங்கள் பட்டியலிட்டால் அது புத்தகமாகவே வடிவம் பெறும்.

கடந்த 2, 3 நாட்களாக நான் பார்ப்பது வினோதமாக இருக்கிறது. பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்திரா காந்தி இந்த நாட்டிக்காக தோட்டாவை தனது உடலில் ஏற்றுக்கொண்டார். ராஜீவ் காந்தியும் உயிர் தியாகம் செய்துள்ளார். பிவி நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நாட்டிற்காக கடுமையாக உழைத்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் பிரதமர் மோடி தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக பொதுமக்கள் முன்னிலையில் கண்ணீர் வடிக்கிறார். பொதுமக்களிடம் அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு பதிலாக அவர் தனது பிரச்சனைகளை கூறி வருகிறார். பிரதமர் மோடியே தைரியமாக இருங்கள். இதுதொடர்பாக பற்றி என் அண்ணன் ராகுல் காந்தியிடம் கற்று கொள்ளுங்கள். நம் மீது கூறப்படும் விமர்சனங்களை மறந்துவிட வேண்டும் என ராகுல் காந்தி கூறுகிறார்.
நாட்டுக்காக உடலில் குண்டுகளை ஏந்தி கொள்ளவும் தயார் என ராகுல் காந்தி கூறுகிறார். விமர்சனங்கள், அவதூறு பிரசாரம், அவமானங்கள், துப்பாக்கி குண்டுகள் என எது வந்தாலும் நாட்டுக்காக சத்திய பாதையில் பயணிப்பதாக அவர் சொல்கிறார். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம் தான். பயப்படாதீர்கள்'' என பிரதமர் மோடியை விமர்சனம் செய்து அட்வைசும் வழங்கி உள்ளார். பிரியங்கா காந்தியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications