குளிர்பானத்தில் மயக்க மருந்து, Wifi கட்.. கர்நாடக ரெசார்ட்டில், பெண் பலாத்காரம்! கொடூர பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பெண் தங்கிய 'ஹோம்ஸ்டே'வில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. 'ஹோம்ஸ்டே'வின் சமையல் தொழிலாளி மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டமாக குடகு உள்ளது. இங்கு தான் காவிரி ஆறு பிறக்கிறது.காபி தோட்டங்கள், யானை முகாம், வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் என்று குடகு மாவட்டமே குளுமையாக இருக்கும்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் குடகு மாவட்டத்துக்கு சென்றார். சுற்றுலா வந்தார். அவர் குட்டா கிராமத்தில் உள்ள 'ஹோம்ஸ்டே'-வில் தங்கினார். அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சமையல் தொழிலாளர் பிரிஜேஷ் குமார் மற்றும் 'ஹோம்ஸ்டே' உரிமையாளர் விஷால் பொன்னன்னன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறியுள்ளதாவது:
பாதிக்கப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணி கடந்த மாதம் ஏற்கனவே இங்கு வந்து தங்கிவிட்டு சென்றார். அதன்பிறகு மீண்டும் ஏப்ரல் 12ம் தேதி ஒருவாரம் தங்கினார் இந்த 'ஹோம்ஸ்டே'உரிமையாளரின் பெயர் விஷால் பொன்னன்னன். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் குமார் என்பவர் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த வேளையில் பிரிஜேஷ் குமார், அந்த பெண் குடிக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்து அந்த பெண் மயங்கினார். அரைகுறை மயக்கத்தில் இருந்த பெண்ணை பிரிஜேஷ் குமார் பலாத்காரம் செய்தார். மேலும் மயக்கம் தெளிந்துவிட்டால் சம்பவம் குறித்து அந்த பெண் வெளியில் கூறிவிடுவார் என பயந்த பிரிஜேஷ் குமார் அவரை அறையில் அடைத்து வைத்தார்.
இருப்பினும் இந்த சம்பவம் பற்றி 'ஹோம்ஸ்டே' உரிமையாளர் விஷால் பொன்னனுக்கு தெரிந்துவிட்டது. அவர் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. மாறாக பிரிஜேஷ் குமாருக்கு ஆதரவாக இந்த பிரச்சனையை மூடி மறைக்க முயன்றார். அதன்படி அமெரிக்க பெண் யாரிடமும் தொடர்பு கொள்ள கூடாது என்று இருவரும் நினைத்தனர். அதன்படி உரிமையாளர் விஷால் பொன்னன்னன் அந்த பெண் தங்கியிருந்த அறையில் 'வை-பை' வசதியை துண்டித்தார். இதனால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்பிறகு சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டி ஏப்ரல் 17 ம் தேதி வெளியே அனுப்பினர். அந்த அமெரிக்க பெண் மைசூர் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டார். அதன்பிறகு தான் அந்த பெண் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தார். அதன்பிறகு தூதரகம் சார்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் கர்நாடகா உள்துறை அமைச்சருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தான் போலீசார் களத்தில் இறங்கி பலாத்காரம் செய்த சமையல் தொழிலாளி பிரிஜேஷ் குமாரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த 'ஹோம்ஸ்டே' உரிமையாளர் ரவி பொன்னன்னும் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications