ஜோசப்னு சொன்னதும் ஓட்டு போட்டுட்டீங்க.. நான் இந்து.. சர்ச்சையாகிய அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் தோல்வியால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ், தவெக மீது அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார். இது சர்ச்சையாகி கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அனிதா ராதாகிருஷ்ணன் மதத்தை குறிப்பிட்டு மீண்டும் விஜய் மற்றும் தவெக குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நான் அனிதா ராதாகிருஷ்ணன் தான். ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை. இந்துக்கள் ஓட்டு வேண்டும் என்கிறபோது விஜய் என்றும், கிறிஸ்தவர்கள் ஓட்டு வேண்டும் என்கிறபோது ஜோசப் விஜய்யாக ஆகிவிடுகிறார். மக்களை ஏமாற்றி, சின்ன பிள்ளைகளை வைத்து விஜய்க்கு ஓட்டு போட சொல்லி வெற்றி பெற்றுள்ளனர்.

ஜோசப் பெயர்
இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்கு தான் இந்த ஆட்சி ஓடும். திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். எங்கள் தலைவர் மீண்டும் முதலமைச்சராவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் எங்களால் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றான். ராத்திரியோடு ராத்திரியாக பெட்டியை கட்டி காங்கிரஸ் ஓடிவிட்டது. ராகுலை அடுத்த பிரதமர் என்று சொன்னது எங்கள் தலைவர். விஜய்யின் கைபிடித்து நிற்பது எவ்வளவு பெரிய மானக்கேடு.
காங்கிரஸை மொத்தமாக காலி செய்ய வேண்டும். தமிழகத்தில் அந்தக் கட்சி இருக்க கூடாது. அனிதா ராதாகிருஷ்ணனை இந்து ஆக நினைக்கின்றீர்கள். நாங்கள் மதம், ஜாதியை பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் மதத்தை பார்த்துவிட்டீர்கள். இனி ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றுசொன்னால் ஓட்டு போடுவீர்கள் தானே. இது விளங்குமா. எங்கள் தலைவரை முறைக்கலாமா நீங்கள். அவர் மதத்தை பார்த்தாரா. ஜோசப் என்றவுடன் ஓட்டு போட்டுவிட்டீர்கள். என்னவோ எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
காங்கிரஸ்க்கு கண்டனம்
எங்களுடைய தலைவரின் இயக்கமான திமுக, மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்த உங்களின் பொற்பாதங்களை தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அவரின் பேச்சுக்கு தவெக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications