தொக்காக சிக்கிய நடிகை ரன்யா ராவ்.. ரூ.34 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
பெங்களுர்: தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது .
கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால், கடந்த மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ரன்யா ராவ் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டார்.

அவரது வீட்டில் நடந்த சோதனையில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகின.
ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் கர்நாடகாவில் புயலைக் கிளப்பியது. இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி, அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நடிகை ரன்யா ராவ், ரூ.38 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு பெரிய ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரன்யா ராவின் நெருங்கிய உதவியாளர் தருண் ராஜு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளார். நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் 3வது நபராக வியாபாரி சாஹில் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34.12 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவரது சொத்துகள் முடக்கம் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விக்டோரியா லேஅவுட்டில் உள்ள வீடு, அர்காவதி லேஅவுட்டில் உள்ள நிலம், தும்கூரில் ஒரு தொழில்துறை நிலம் மற்றும் ஆனேகலில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்ட ரன்யா ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications