புலிகேசியில் இரட்டை இலை.. எடப்பாடிக்கு செம “பலம்”.. சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் அணியின் 3 பேர்?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், ஓபிஎஸ் தரப்பு சுயேச்சை சின்னத்தில் களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுக விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாகவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
மேலும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் ஆணையம், ஈபிஎஸ்ஸை பொதுச் செயலாளர் என அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியுள்ளதால், ஈபிஎஸ் அறிவித்த வேட்பாளரான அன்பரசனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க ஏ மற்றும் பி ஃபார்மில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார்.
கர்நாடகாவில் புலிகேசி நகர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் ஓபிஎஸ்ஸூம் வேட்பாளர்களை அறிவித்திருந்தார். ஆனால், ஓபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்மில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் கையெழுத்திட முடியாது. எனவே, அவர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications