தேர்தலில் இடம்பெறும் இலவச அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்.. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி
பெங்களூர்: தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவச திட்டங்கள் அறிவிப்பதை முறைப்படுத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுத்த நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முக்கிய காரணம் என்பது அவர்கள் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் தான்.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம். அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம்.டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது இந்த 5 உத்தரவாத திட்டங்கள் அடங்கிய அட்டைகளை காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் வழங்கினர். இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சியின் இளைஞரணி பிரிவு தலைவரான நிகில் குமாரசாமி (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன்) சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‛‛காங்கிரஸ் கட்சி தேர்தல் வேளையில் 5 இலவச உத்தரவாத திட்டங்களை அறிவித்தது. இததொடர்பான உத்தரவாத அட்டையை வீடு வீடாக வழங்கினர். இப்படி செய்வது என்பது தேர்தலில் நேர்மையாக நடப்பதை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதோடு தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துவதற்கான வழிக்காட்டுதல்களை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு என்பது கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி தினேஷ் குமார் மற்றும் நீதிபதி சிவசங்கரே கவுடா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‛‛தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது என்பது மக்கள் மனநிலை மாற்றலாம். மேலும் தேர்தல் வேளையில் இலவச திட்டங்கள் குறித்த உத்தரவாத அட்டைகளை வழங்குவது என்பது மக்களை கவர்ந்திழுக்கிறது. கர்நாடகா மட்டுமின்றி தெலுங்கானாவிலும் இந்த நடைமுறையை பின்பற்றி உள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது எந்த மாதிரியான குற்றமோ அதுபோல் தான் இதுவும் உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு கருத்து மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்டத்துறை அமைச்சகம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications