கர்நாடகாவில் ஷாக் கொடுத்த மின் கட்டணம்.. அதிரடியாக உயர்வு.. யூனிட்டிற்கு எவ்வளவு கூடுதல் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனிட்டிற்கு 36 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சியான பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரலிலும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கர்நாடக மின்சார ஒழுங்குழு முறை ஆணையம், மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மின்சார வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.

யூனிட்டிற்கு 36 பைசா அதிகரிப்பு
மின்சாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பணிக்கொடைக்கு அரசு வழங்கும் பங்குக்கு ஆகும் செலவை ஈடுசெய்யும் விதமாக அதை மின் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, யூனிட் ஒன்றுக்கு 36 பைசா உயர்த்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டண உய்ரவு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணம் வரும் 2027-28-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.90 வசூலிக்கப்படும் நிலையில், கட்டண உயர்வு பெரும் சுமையாக இருக்கும் என்று அம்மாநில பாஜக கூறியுள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு பாஜக விமர்சனம்
இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், "கர்நாடகத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசு அமைந்த நாளில் இருந்தே விலைகள், வரிகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இந்த காங்கிரஸ் அரசு மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை வழிப்பறி செய்கிறது. ஒருபுறம் உத்தரவாத திட்டங்களின் பெயரில் பயன்களை கொடுத்துவிட்டு மறுபுறம் வரிகள் உயர்வு மூலம் அதை பறித்து கொள்கிறது" என்றார்.
எதற்காக மின் கட்டண உயர்வு
அதே வேளையில், மின்கட்டண உயர்வுக்கு கர்நாடக அரசு காரணம் இல்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையமே கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்வதாகவும் கர்நாடக அமைச்சர் கேஜே ஜார்ஜ் கூறியுள்ளர். பல ஆண்டுகளாக நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் இதனை கொடுக்கவேண்டியுள்ளது.
இதற்கான செலவை ஈடுகட்டவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூடுதல் கட்டண செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications