"அரக்கனை கொன்றுவிட்டேன்" வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்ட கர்நாடக மாஜி டிஜிபி மனைவி கைது
பெங்களூர்: கர்நாடகா மாநில முன்னாள் டிஜிபி ஓம்பிரகாஷ் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றியிருந்தார்.

பெங்களூரில் தென்கிழக்கு எச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் ஓம் பிரகாஷ் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓம் பிரகாஷ் சடலமாக மீட்கப்பட்ட அறையில் ரத்த கறைகள் படிந்திருந்ததால் இதை சந்தேக மரணமாகவே போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, குடும்பத்தினரிடம் நேற்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு பல முறை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த கொலை நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓம் பிரகாஷின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஓம் பிரகாஷின் மனைவி மனநலன் பாதிப்பு அடைந்தவர் என சொல்லப்படுகிறது. ஓம் பிரகாஷ் இறந்த சம்பவத்தை எச்.எஸ்.ஆர். லே அவுட் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு ஓம் பிரகாஷ் இறந்துவிட்டார் என பல்லவிதான் தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்துதான் போலீஸார் அங்கு சென்று கதவை தட்டிய போது நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லையாம். இதையடுத்து கதவை திறந்தாராம். அப்போது ஓம் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாராம். அப்போது கணவரை கொன்றுவிட்டதாக பல்லவி கூறினார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பல்லவி ஒரு தகவலை தெரிவித்திருந்தாராம். அதில், "ஓம் பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் அவர் என்னை கொல்ல வாய்ப்புள்ளது" என பதிவிட்டிருந்தாராம். இந்த நிலையில் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓம் பிரகாஷை பல்லவி தீர்த்துக் கட்டியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 15 ஆண்டுகளாகவே கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலை இருந்து வந்ததாம். அதாவது ஓம் பிரகாஷ், உத்தர கன்னடாவில் வேலை செய்த போது தண்டேலியில் நிலம் வாங்கியிருந்தார். அந்த நிலத்தை அவரது சகோதரிகள் பெயரில் பதிவு செய்திருந்தாராம்.
இது பல்லவிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். மனைவி, மகன், மகள் பெயரில் வாங்காமல் சகோதரிகள் பெயரில் வாங்கியது ஏன் என கேட்டு ஓம் பிரகாஷிடம் பல்லவி அடிக்கடி சண்டையிட்டு வந்தாராம். இது தொடர்பாகவே நேற்றும் இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக தெரிகிறது. அப்போதுதான் பல்லவி ஆத்திரமடைந்து ஓம் பிரகாஷை கத்தியால் பலமுறை குத்தி கொன்றுள்ளார்.
முதல் மாடியில் கணவரை கொன்ற பல்லவி, இன்னொரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கு போன் செய்து அந்த அரக்கன கொன்றுவிட்டேன் என்றாராம். இந்த நிலையில் போலீஸார் பல்லவியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications