கையில் கத்தி.. பெங்களூர் பஸ்சுக்குள் கண்டக்டரை சரமாரியாக குத்திய இளைஞன்.. பீதியில் ஓடிய பயணிகள்
பெங்களூர்: சமீபத்தில் கால்சென்டர் பணியில் இருந்து நீக்கப்பட்ட கோபம் மற்றும் வேறு வேலை கிடைக்காத விரக்தியில் சிறைக்கு செல்கிறேன் எனக்கூறி இளைஞர் ஒருவர் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ் சின்ஹா (வயது 25). இவர் பெங்களூரில் தங்கி உள்ளார். நேற்று மாலையில் ஹர்ஷ் சின்ஹா பிஎம்டிசி வால்வோ பஸ்சில் பயணித்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக 45 வயது நிரம்பிய யோகேஷ் பணியில் இருந்தார்.

அப்போது ஹர்ஷ் சின்ஹா பஸ்சின் படிக்கட்டு பகுதியில் நின்றார். இதை பார்த்த யோகேஷ் அவருக்கு அறிவுரை கூறினார். படிக்கட்டில் நிற்காமல் பஸ்சுக்குள் வரும்படி கூறினார். ஆனால் ஹர்ஷ் சின்ஹா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஹர்ஷ் சின்ஹா மற்றும் கண்டக்டர் யோகேஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சில் 40க்கும் அதிகமான பயணிகள் பயணித்த நிலையில் இந்த வாக்குவாதம் நடந்தது. ஒயிட்பீல்டுவில் உள்ள வைதேகி சர்க்கிள் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் திடீரென்று பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ஹர்ஷ் சின்ஹா, கண்டக்டர் யோகேசின் வயிற்றில் 3 முறை ஆக்ரோஷமாக குத்தினார்.
சொத்துகளை விற்க E - Khata கட்டாயம்.. செப்டம்பர் 30ம் தேதி முதல் அமல்.. வெளியான முக்கிய தகவல்
இதனை கண்ட பயணிகள் அலறினர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தவே பயணிகள் அலறியடித்து அதில் இருந்து இறங்கினர். சிலர் கண்டக்டர் யோகேசை மீட்ட நிலையில் ஹர்ஷ் சின்ஹா பஸ்சுக்குள்ளேயே ரத்தக்கறை படிந்த கத்தியை கையில் வைத்தபடி நின்றார். பஸ்சின் கதவு பூட்டப்பட்டது. இதனால் கோபமான ஹர்ஷ் சின்ஹா பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயன்றார்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் உடனடியாக வந்து ஹர்ஷ் சின்ஹாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், ஹர்ஷ் சின்ஹா ஜார்கண்ட்டில் இருந்து பெங்களூர் வந்து கால்சென்டரில் பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் 20ம் தேதி அவரை மேனேஜர் பணி நீக்கம் செய்துள்ளார். அதன்பிறகு அவருக்கு வேலை என்பது கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஹர்ஷ் சின்ஹா வேலையின்றி வெளியே இருப்பதை விட சிறையில் இருக்கலாம் என நினைத்து கண்டக்டரை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications