அப்போ 1000-இப்போ 2000! பிரதமர் மோடி ஜப்பான் சென்றாலே ரூபாய் நோட்டு ரத்தாகுதே! கார்கே சந்தேகம்
பெங்களூர்: பிரதமர் மோடி ஜப்பான் செல்லும்போதெல்லாம் ரூபாய் நோட்டுகளை தடை செய்கிறார். அன்று ரூ.1000 தடை செய்த பிரதமர் மோடி இன்று ரூ.2000 நோட்டை தடை செய்துள்ளார் என கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா மேடையில் விமர்சனம் செய்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதன்மூலம் கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்காராக மாறலாம் என காத்திருந்த ஜேடிஎஸ் கட்சிக்கும் பெரிய சறுக்கல் ஏற்பட்டது. இந்த கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதுதவிர மற்றவர்கள் 4 பேர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக இன்று சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த பதவியேற்பு விழா பெங்களூரில் நடந்தது. விழாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கடந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் பாஜக போல் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என செயல்படமாட்டோம்.

பிரதமர் மோடி இப்போது இன்னொரு உத்தரவு போட்டுள்ளார். அவர் ஜப்பான் செல்லும்போதெல்லாம் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த முறை ஜப்பான் சென்றபோது ரூ.100 நோட்டுகளை ரத்து செய்தார். இந்த முறை ஜப்பான் சென்றபோது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரத்து செய்துள்ளார். இப்படி செய்வதால் லாபம் ஏற்படுகிறதா? நஷ்டம் ஏற்படுகிறதா? என்பது பற்றி பிரதமர் மோடி எதுவும் தெரிவிப்பது இல்லை. மோடியின் இத்தகைய செயல்பாடு நாட்டு மக்களுக்கு தொல்லையை கொடுக்கின்றன'' என விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார். நேற்று ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமர் மற்றும் பிற நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் ஜப்பானில் ஹிரோசிமா நகரில் மார்பளவு காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் தான் ஜப்பான் பயணத்தை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications