தமிழ்நாட்டின் அனுமதி ரொம்ப முக்கியம்… மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி ஆதரவு கருத்து
பெங்களுரு : மேகதாது அணையை கட்ட தமிழகத்தின் அனுமதி மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
மேகதாது அணையை ரூ.5.9 ஆயிரம் கோடி செலவில் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்காமல் கர்நாடகா, தமிழகம் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில் புதிய அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு கர்நாடகா அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கையும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், தமிழகத்தின் எல்லைப்பகுதியில் கட்டப்படவுள்ள இந்த அணையால் தமிழகத்தில் மேலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனக் கூறி தமிழக அரசு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களை பேசி தான் தீர்க்க வேண்டும் என்றும், தமிழகமும், கர்நாடகாவும் சகோதர மாநிலங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேகதாது அணையை கட்ட தமிழகத்தின் அனுமதி மிக முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவை கட்ட முடியாது என கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து மேகதாது விவகாரத்தில் முதன்முறையாக தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.