கட்சியை விட்டு போனதுக்கு ராகுல் காந்தி தான் காரணம்... போட்டுடைத்த எஸ்.எம். கிருஷ்ணா
Recommended Video
பெங்களூரு:ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 46 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். மாநில ஆளுநராக, மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், 2017ம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் பொதுக்கூட்டத்தில் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கிய காரணம். ஆட்சியிலும், கட்சியிலும் அவரின் தலையீடு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.
தலையிட்ட ராகுல்
10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவருக்குத் தெரியாமல், அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பல முக்கிய முடிவுகளை ராகுல் காந்தி எடுத்தார்.
தகுதியானவர்கள் இல்லை
2ஜி முறைகேடு, நிலக்கரி ஊழல், காமென்வெல்த் ஊழல் போன்றவை நடந்ததால் தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டது. அப்போது தலைமை பதவிக்கு யாரும் தகுதியானவர்களாக இல்லை.
தனியாக அமைச்சரவை
அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது அமைச்சரவையையும், அரசையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருந்தார். மாறாக, ராகுல் காந்தி அரசுக்கு இணையாக தனியாக ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திச் செயல்பட்டு வந்தார்.
ராகுல் ரகசிய உத்தரவு
2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் திறமையாகவே செயல்பட்டேன். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.
பொறுபேற்கிறேன்
2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நானும் பதவியில் இருந்தேன் என்பதால், அப்போது நடந்த அனைத்து விஷயங்களிலும் நல்ல விஷயங்களுக்கும், தவறுகளுக்கும் எனக்கும் பொறுப்பு உண்டு என்று பேசினார்.