லைஃப் டைம் செட்டில்மெண்ட்! நீட் தேர்வில் தோல்வி..இன்று ரோல்ஸ் ராய்ஸில் வேலை! கோடியை அள்ளும் இளம்பெண்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ரிதுபர்ணா என்ற இளம் பெண் இன்ஜினியரிங் படித்து முடித்து தற்போது உலக அளவில் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவருக்கு வருடத்திற்கு 72.3 லட்சம் ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிதுபர்ணா நீட் தேர்வில் தோல்வியடைந்த பின் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மிக பிரபலமான கார் பிராண்ட் என்றால் அது ரோல்ஸ் ராய்ஸ் தான். இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் நூறாண்டுகளை கடந்து வெற்றிகரமாக நடை போடுகிறது. நினைத்த உடனே யார் வேண்டுமானாலும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிஎம்டபிள்யூ ஏஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பின்னர் பிஎம்டபிள்யூ ஏஜி அதனை கைப்பற்றியது. தற்போது உலக அளவில் பேன்தம், கோஸ்ட், கலீனன், ஸ்பெக்டர் போன்ற பிரபலமான சொகுசு கார்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தாலே அது மிகப்பெரிய கௌரவம் என பலரும் நினைப்பார்கள். அதனால்தான் பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த காரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திலேயே வருடத்திற்கு சுமார் 72 லட்சம் ரூபாய் ஊதியத்திற்கு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். மங்களூரைச் சேர்ந்த 20 வயதான ரிதுபர்ணா என்பவர் தான் இந்த பெருமையை பெற்றிருக்கிறார்.
மங்களூரைச் சேர்ந்த சரஸ் -கீதா தம்பதியின் மூத்த மகளான ரிதுபர்ணா, சிறு வயது முதலே மருத்துவர் கனவில் இருந்தார். ஆனால் நீட் தேர்வால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராத ரிதுபர்ணா இன்ஜினியரிங் துறையில் ரோபோடிக் மற்றும் ஆட்டோமேஷன் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். அதிக ஆர்வம் காரணமாக பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆராயத் தொடங்கினார்.
குறிப்பாக பாக்கு விவசாயிகளுக்காக தனது குழுவுடன் சேர்ந்து அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை கண்டுபிடித்து கோவா ஐநாக்ஸ் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். இந்த நிலையில் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய விண்ணப்பித்தார். பல இழுத்தடிப்புகளுக்கு பிறகு ரிதுபர்ணா நிறுவனத்தில் அவருக்கு இன்டர்ன்ஷிப் கிடைத்தது. தொடர்ந்து எட்டு மாதங்கள் கடினமான நேர்காணல் மற்றும் சோதனைகளுக்கு பிறகு இன்டர்ன்ஷிப் கிடைத்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இரவு பகல் பாராமல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் இன்டர்ன்ஷிப் படித்திருக்கிறார் ரிதுபர்ணா. இதற்கிடையே கல்லூரி படிப்பையும் தொடர்ந்த நிலையில் அவரது தீவிர முயற்சியின் பலனாக தற்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அதுவும் வருடத்திற்கு 72 லட்சம் ரூபாய் ஊதியத்தில்.. இந்த ஆண்டு இறுதி செமஸ்டர் முடிந்ததும் அமெரிக்காவில் டெக்ஸாஸ் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் அவர் பணியில் சேர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வால் மருத்துவர் கனவு தகர்ந்தாலும் தனது திறமையால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இடம் பெற்றுள்ள ரிதுபர்ணா ஒரே நாளில் இந்தியா முழுவதும் தேடப்படும் இளம் பெண்ணாக மாறியிருக்கிறார்.
அதேநேரம், இது அமெரிக்காவில் சாதாரண சம்பளம் என்றும், தனியார் வேலைக்கு போவதில் என்ன பெருமை உள்ளது என்றும் மக்களில் ஒரு சாரார் வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications