சினிமா சண்டை காட்சியை மிஞ்சும் சம்பவம்.. கார்களால் மோதி தாக்குதல்.. கர்நாடகவை அதிரவைத்த கேங் வார்
பெங்களூர்: சினிமா சண்டை காட்சிகளை மிஞ்சும் வகையில் கார்களால் மோதியும், கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கியும் இரண்டு கேங்க் இடையே பயங்கர சண்டை கர்நாடகாவில் நடைபெற்றது. பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவின் உடுப்பியில் சினிமா சண்டை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இரு கேங் இடையே பயங்கர மோதல் நடைபெற்றுள்ளது. கார்களை கொண்டு மோதியும் கத்தியால் தாக்கியும் இரண்டு குழுக்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:

கேங் வார்: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மணிப்பால் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை செல்லும் குஞ்சிப்பேட்டு என்ற இடத்தில் கடந்த 18 ஆம் தேதி இரவு மாருதி ஸ்விப்ட் காரில் வந்திருந்த இரண்டு குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாக சொல்லப்படுகிறது.
காரை கொண்டு மோதி: இரண்டு கேங்கும் சினிமா சண்டை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பயங்கரமாக மோதிக்கொண்டனர். காரின் மீது கற்களை வீசி ஒரு தரப்பு தாக்கிக் கொண்டு இருக்கும் போது.. காரைக்கொண்டு வேகமாக மோதி மற்றொரு தரப்பு தாக்குதல் நடத்தியது. பின்னோக்கி வந்து மீண்டும் காரை கொண்டே எதிர்தரப்பை இடித்து தள்ளியது.
பதிலுக்கு அந்த தரப்பினரும் காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். ஒரு கட்டத்தில் காரில் இருந்து இறங்கி கத்தியால் தாக்கி மோதிக்கொள்கின்றனர். பார்ப்பதற்கே நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மோதல் தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கண்டனம்: துர்காபிரசாத் ஹெக்டே என்பவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாஜக விமர்சனம்: இதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு உடுப்பி சம்பவமே உதாரணம் என பாஜக சாடி வருகிறது. கர்நாடக பாஜக தனது எகஸ் தளத்தில் இது தொடர்பாக கூறுகையில், "கேங் வார், பெண்கள் மீதான தாக்குதல், கொலை, குண்டு வெடிப்பு, கஞ்சா, ஒபியம், ரேவ் பார்டிகள், பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது.
சமூக விரோதிகள், பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் விளைவே இது. போலீசை கைப்பாவை போல சித்தராமையா பயன்படுத்தி வருகிறார். நாட்டிற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு காட்டும் கர்நாடக மாடல் இதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications