வீடே நாறிப்போயிடும்.. பெங்களூரில் பொது இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு அதிகாரிகள் நூதன தண்டனை!
பெங்களூர்: பெங்களூரில் சாலைகளில் குப்பைகள் வீசுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இன்னும் சிலர் தொடர்ந்து சாலைகளில் குப்பைகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் தான் சாலைகளில் குப்பை கொட்டுவோரை அடையாளம் காணும் ஊழியர்கள் அதன்பிறகு ஆட்டோவில் குப்பைகளை கொண்டு வந்து அவர்களின் வீடுகள் முன்பு கொட்ட தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 200க்கும் அதிகமான வீடுகள் முன்பு குப்பை கொட்டப்பட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் எப்படி பிரச்சனையோ.. அதேபோல் இருக்கும் இன்னொரு பிரச்சனை தான் குப்பை பிரச்சனை. பெங்களூர் நகரில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குப்பைகளும் அதிகரிக்கிறது. தினமும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். வீட்டின் வாசலுக்கே தூய்மை பணியாளர்கள் சென்று மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தனித்தனியாக வாங்கி செல்கின்றனர்.

ஆனாலும் கூட பலரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்குவது கிடையாது. வீடுகளில் சேரும் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து இரவு நேரத்தில் சாலையோரங்களிலும், காலி இடங்கள், மைதானங்கள், கால்வாய்களில் வீசி செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசிகிறது.
மேலும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு ஜிபி, எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அதாவது பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிப்பு கேமரா மற்றும் மார்ஷல்கள் மூலமாக கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட மக்கள் தங்களின் மனநிலையை மாற்றுவது இல்லை.
குப்பைகளை தொடர்ந்து பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் தான் பொது இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு பாடம் புகட்ட பெங்களூர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்டுபிடித்து அவர்களின் வீட்டு முன்பு அதிகாரிகளே, தூய்மை பணியாளர்களின் உதவியுடன் குப்பைகள் கொட்டி அபராதம் விதிக்கின்றன. இது தற்போது தொடங்கி உள்ளது.
கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் சமீபத்தில் போட்ட உத்தரவில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து பெங்களூர் அதிகாரிகள் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகள் முன்பு குப்பைகளை கொட்ட தொடங்கி உள்ளனர். இதனை ‛குப்பை கொட்டும் உற்சவம்' என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 218 வீடுகள் முன்பு ஆட்டோக்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மேலும் அவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்படுகிறது. . இதனால் பெங்களூர் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டின் முன்பு அதிகாரிகள் குப்பைகளை வந்து கொட்டி அபராதம் கொடுக்கவும் நேரிடும்.












Click it and Unblock the Notifications