"கடவுள் அவரை தண்டிப்பார்.." ஒரு நொடியில் விபரீத முடிவை எடுத்த அரசு ஊழியர்! குடும்பமே கலங்கி நிக்குது
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மேல் அதிகாரி ஒருவர் தன்னை துன்புறுத்தியதாகச் சொல்லி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மேல் அதிகாரி ஒருவரை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன்பு அவர் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் தனது மூத்த அதிகாரி ஒருவர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கர்நாடக அரசு ஊழியர்
உயிரிழந்த நபர் சமூக நலத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றும் மல்லிகார்ஜுன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பாவகடா அப்ப பந்தே என்ற பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர் வீடியோ ஒன்றை எடுத்து அதைத் தனது சக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் மாவட்ட இயக்குநரை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக நலத்துறையின் சம்பந்தப்பட்ட மாவட்ட இயக்குநர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வீடியோ
பாவகடா தாலுகாவின் கூண்டர்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், இந்த வீடியோவில் தனது குடும்பத்தினர் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார். தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்ட அவர்களுக்கு இனி தன்னால் ஆதரவளிக்க இயலாது என்பதை உணர்ந்ததாகவும், தனது குடும்பத்தினர் யாரும் சம்பந்தப்பட்ட நபரைப் பழிவாங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குற்றவாளியைக் கடவுளும் சட்டமும் தண்டிக்கும் என்ற நம்பிக்கையை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மல்லிகார்ஜுன் அந்த வீடியோவில் மேலும், "என் தாய், என் மனைவி, என் குழந்தைகள் என்று என் குடும்பமே என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டது. அவர்கள் எனக்கு மரியாதை கொடுத்தார்கள். நான் அவர்களுக்கு உதவ வேண்டியிருந்தது. இன்னும் பல விஷயங்களை அவர்களுக்காக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.. என்னால் அது முடியாமல் போய்விட்டது.
கடவுள் தண்டிப்பார்
சமூக நலத்துறை மாவட்ட இயக்குநர் தொல்லை காரணமாக நான் இந்த முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது. கடவுள் அவரைத் தண்டிப்பார். அவரது குடும்பத்தினர் தவறு செய்யாதவர்கள் என்பதால், என் குடும்பத்தினர் அவர்களைப் பழிவாங்குவதற்குத் தேவையில்லை. கடவுளும் சட்டமும் நிச்சயம் அவரைத் தண்டிக்கும்" என அவர் வேதனையோடு வீடியோவில் கூறுகிறார்.
மறுப்பு
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. மல்லிகார்ஜுனாவை தற்கொலைக்குத் தூண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தண்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தினர். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரி திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அந்த அதிகாரி, பெங்களூர் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த முறைகேடுகள் புகாரின் பேரில், மல்லிகார்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும் விசாரணைக்கு இரு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார். அதேநேரம் விசாரணை அது இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் விளக்கினார்.
சந்தேகம் இருக்கு
மல்லிகார்ஜுன் ஓய்வுபெற 10 நாட்களே இருந்ததால், இந்த விசாரணை ஓய்வூதியத்தைப் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். தான் ஓய்வூதியத்தைத் தடுக்க எந்தவொரு விஷயத்தையும் செய்யவில்லை... மாறாக அதை விரைந்து பிராசஸ் செய்வே உதவியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், இந்த மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் குறித்து குழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வெளிவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (Call Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications