ஓயாத சர்ச்சை! கர்நாடக சாலைக்கு காந்தியை கொன்ற கோட்சே பெயர்.. வைத்தது யார் தெரியுமா? "ஒரே குழப்பம்"
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலைக்கு வைக்கப்பட்ட பெயர் தான் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலில் புர்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து.
அந்தப் பிரச்சினை முடிந்த உடனேயே ஹலால் கறி விவகாரம், இந்து கோயில்கள் முன் இஸ்லாமியர்கள் கடை வைக்க எதிர்ப்பு என அடுத்தடுத்து சர்ச்சை கிளம்பியது.
புர்கா அணிந்து கொண்டு டான்ஸ் ஆடுவது தவறு.. கர்நாடக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பால் பணிந்த விழா குழு
கர்நாடக சாலை
இதுபோன்ற சர்ச்சைகள் காரணமாகக் கர்நாடக மாநிலத்தில் அமைதியற்ற ஒரு சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள சாலை ஒன்றுக்குக் காந்தியைச் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்சே பெயர் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சாலையில் மகாத்மா காந்தியின் கொலையாளியான நாதுராம் கோட்சேவின் பெயரைக் கொண்ட பலகை காணப்பட்டது. இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது.
கோட்சே சாலை
இது குறித்து உடனடியாக கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு. மேலும் போலீசாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து 'பதுகிரி நாதுராம் கோட்சே சாலை' என்ற பெயர்ப் பலகையை உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இந்த போர்டை வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அமைச்சர் விளக்கம்
கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் வி சுனில் குமாரின் தொகுதியில் உள்ள கார்கலா தாலுகாவில் உள்ள போலோ கிராம பஞ்சாயத்தில் தான் இந்த போர்டு நிறுவப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்த பலகை அரசாலோ அல்லது ஊராட்சி அதிகாரிகளாலோ நிறுவப்படவில்லை என்றும் சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அமைச்சர் சுனில் தெரிவித்தார்.
அதிகாரி என்ன சொல்கிறார்
இது தொடர்பாகப் போலா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ) ராஜேந்திரா கூறுகையில், "யார் இதை வைத்தார்கள் எனக் கிராம பஞ்சாயத்துக்குத் தெரியாது. இந்த சாலைக்கு கோட்சே பெயர் சூட்ட வேண்டும் என எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், போலீஸ் உதவி உடன் அதை அகற்றி விட்டோம். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்படும். விரைவில் இது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
இரு நாட்கள்
குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்தப் பலகை நிறுவப்பட்டதாகவும் இருப்பினும் இன்று தான் இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றுள்ளனர்.
காங்கிரஸ் அட்டாக்
இது குறித்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யோகேஷ் இன்னா கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன், போலா பஞ்சாயத்தில் ஒரு சாலைக்கு நாட்டின் முதல் பயங்கரவாதி நாதுராம் கோட்சே பெயர் சூட்டப்பட்டது. இதை இளைஞர் காங்கிரசார் கண்டறிந்ததும், பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பி.டி.ஓ.விடம் இது குறித்துக் கேட்டோம். அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை. சில மர்ம நபர்கள் சர்ச்சையைக் கிளப்புவதற்காக இந்த சைன்போர்டை நிறுவினர்" என்று தெரிவித்தார். கர்நாடகாவில் அரசுக்கே தெரியாமல் சாலைக்கு கோட்சே பெயர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.