இந்தியன் வங்கி லாக்கரில் தங்க நகைகள் பத்திரம்.. பெங்களூரு பேங்க்கில் கற்பனை செய்ய முடியாத சம்பவம்
பெங்களூரு: பெங்களூரு கிரிநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நடந்த ஒரு பெரிய நகை திருட்டு சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சைபர் கிரைம் போலீசார், தொடர்ந்து பல்வேறு அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு தந்து வந்தாலும், தொடர் மோசடிகள் நடந்தவண்ணம் உள்ளது.. அப்படித்தான் இந்த பெங்களூரு சம்பவமும்..!!
தற்போதைய டிஜிட்டல் உலகில், காவல்துறை பெயரிலேயே போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் லோகோ மற்றும் அதிகாரப்பூர்வ பெயர்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, @tncybercrimeoff என்ற ஒரு கணக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்பதை மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் வளர வளர, நம்முடைய விழிப்புணர்வும் ஒருபடி மேலேயே இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அரசுத் துறைகளின் பெயரில் வரும் எந்த ஒரு அழைப்போ அல்லது செய்தியோ உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்தாமல், நமது தனிப்பட்ட விவரங்களான ஆதார் எண், வங்கித் தரவுகள் அல்லது ரகசிய குறியீடுகளை (OTP) யாரிடமும் பகிரக்கூடாது என்று ஏற்கனவே சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்..
ஆனாலும் மோசடிகள் புதுசு புதுசாக அரங்கேறி வருகின்றன.. இதோ நேற்றுகூட பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது..
லாக்கரில் தங்க நகைகள்
கிரிநகர் இந்தியன் வங்கி கிளையில் தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த மாதம், அதனை திரும்பபெறுவதற்கு வந்தனர். அப்போது வங்கியின் மேனேஜர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை தேடிய போது அவை காணாமல் போனது தெரியவந்தது. லாக்கரில் 21 பாக்கெட்டுகளில் இருந்த 2780 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட வங்கி மேனேஜனர் உடனடியாக இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்..
இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதில், அந்த நகைகளை திருடியதே அந்த வங்கியின் பிரான்ச் மேனேஜர் கிரண் குமார் என்பது தெரியவந்தது.. 34 வயதான கிரண் குமார், லாக்கரில் இருந்த கஸ்டமர்களின் சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் வங்கி லாக்கர்
கிரண் குமாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியபடி உள்ளன.. சுமார் 2 கிலோ 780 கிராம் எடையுள்ள இந்த நகைகள், 21 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. வங்கி கிளை மேலாளர் லீவில் சென்றதை நோட்டமிட்டு, அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, துணை மேலாளர் கிரண் குமார் இந்த கைவரிசையை காட்டினாராம்..
ஆனால் மொத்தமாக திருடாமல், கடந்த 3 மாதங்களாக சிறுக சிறுக இந்த நகைகளை திருடி வந்த கிரண் குமார், அவற்றை பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து உள்ளார்... இந்த நகைகளை திருடுவதற்கு முக்கிய காரணம், கிரண்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவராம்..
700 கிராம் தங்கம்
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 25 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.. அந்த கடனை அடைப்பதற்காகவே வங்கியின் நகைகளை திருட ஆரம்பித்திருக்கிறார்..
ஆனால் திருடிய நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தையும் அவர் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திலேயே விட்டு உள்ளார்.
தற்போது வரை போலீசாரால் சுமார் 700 கிராம் தங்க நகைகள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள நகைகள் அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனங்கள், அவற்றை திருப்பி தர மறுத்து வருவதால், போலீசார் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
சொத்து - நகைகள்
ஒரு வங்கியின் உயர் அதிகாரியே தனது பொறுப்பை மறந்து, சூதாட்ட போதையால் வாடிக்கையாளர்களின் சொத்தை திருடிய இந்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்த செய்தி, ஆன்லைன் சூதாட்டம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போக செய்யும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்து உள்ளது. எளிய மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை வங்கி அதிகாரி ஒருவரே திருடியது வங்கி பாதுகாப்பில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டும் காட்டியிருக்கிறது...!!












Click it and Unblock the Notifications