நடமாடும் நகை கடையா இது? நெற்றியில் விபூதியுடன் அடையாளமே தெரியாமல் வெளியே வந்த ஹரி நாடார்! என்னாச்சு?
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஹரி நாடார் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார். நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடை போலவே இருப்பார். கழுத்தில் விதவிதமான நகைகளை அணிந்தபடி வலம் வந்த ஹரி நாடார், ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது ஹரி நாடார் அங்கு பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஹரி நாடார் 3ஆம் இடம் பிடித்தார்.
அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதிலும் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றார். ஹரி நாடார் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஹரி நாடார் கைது: பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்ராமன் என்பவருக்கு கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 7 கோடி கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீஸாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் ஒரு வழக்கு: இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பஷீர் மற்றும் குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாகவும் அந்த பணத்தை மீட்டுத் தருமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தனர்.
இது போல் அடுத்தடுத்து அண்ணாச்சி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தமிழகத்திலும் சில வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் பெரும்பாலும் முடித்து வைக்கப்பட்டிருந்தாலும் பெங்களூர் வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஹரி நாடார் சிறையில் இருக்க நேரிட்டது.
இதனால் அவர் 34 மாதங்களாக அதாவது 1000 நாட்களுக்கு மேல் பரப்பன அக்ரஹார சிறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் மீண்டும் ஜாமீன் கோரிய நிலையில் அந்த மனு கடந்த 23 ஆம் தேதி பெங்களூர் நகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹரி நாடாருக்கு ஜாமீன் கிடைத்தது.
34 மாதங்களுக்கு பிறகு: 1000 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் நேற்றைய தினம் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது நெற்றியில் விபூதி பட்டை, தலை நிறைய நீளமான முடியுடன் வந்த அவரை அடையாளமே தெரியவில்லை. காரணம் அவர் ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் வெளியே வந்தார். ஹரி நாடார் சிறைக்கு சென்ற போது அணிந்திருந்த மொத்த நகைகளையும் வழக்குக்காக பெங்களூர் போலீஸ் பறிமுதல் செய்துவிட்டது. இதனால் அவர் வெறுங்கழுத்துடன் பொட்டு தங்கம் கூட இல்லாமல்தான் வெளியே வந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications