இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்
பெங்களூர்: உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான கே.எம். செரியன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் காலமானார்.
இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து உலகப் புகழ்பெற்றவர் மருத்துவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.எம்.செரியன் (82). மூளைச் சாவடைந்த நோயாளியின் இதயத்தை எடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நபருக்குப் பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து முடித்த பெருமை பெற்றவர். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

அதேபோல, சென்னை பெரம்பூரிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். சென்னை முகப்பேரை அடுத்த கோல்டன் பிளாட்ஸ் அருகே ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையை நிறுவி சேவை வழங்கி வந்தார். மருத்துவத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் செரியன் கலந்துகொண்டுள்ளார். அப்போது, அவர் வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் செரியனின் மறைவு மருத்துவத் துறையில் பேரிழப்பாக அமைந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் செரியனின் இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் கே.எம்.செரியனின் சுயசரிதை நூலான 'ஜஸ்ட் ஆன் இன்ஸ்ட்ரூமெண்ட்' என்ற புத்தகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளத்தில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications