3 நாட்களாக கண்ணாமூச்சு காட்டிய மழை கொட்டி தீர்த்தது இன்று.. குளிர் நடுக்கத்தில் பெங்களூர், ஒசூர்
பெங்களூர்: அங்கே சுற்றி, இங்கே சுற்றிய மழை, பெங்களூரு, ஓசூர் நகரங்களிலும் இன்று மதியத்திற்கு பிறகு, வெளுத்து வாங்கி விட்டது.
வங்கக்கடலில் கஜா புயல் உருவானது முதல், சென்னைக்கு மழை வரும் என்று எதிர்பார்த்தது போலவே, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தன.
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், ஓசூர், பெங்களூரு நகரங்களை மேகமூட்டம் மட்டுமே ஏமாற்றி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் பெங்களூரில் இதமான தட்ப வெப்பம் நிலவியது.
மதியம் முதலே பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஓசூர் நகரிலும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பியவர்கள் அவதிக்குள்ளாகினர்.
நவம்பர் மாத குளிருடன், இந்த மழையும் சேர்ந்து கொண்டதால், பெங்களூர், ஒசூர் நகரங்களில் குளுகுளு வானிலை நிலவுகிறது.