கர்நாடகாவில் 20-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய நெறிமுறைகள்... எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 20-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு வழிகாட்டு புதிய நெறிமுறைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மே மாதம் 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதில் தளர்வு அளிக்கப்படுவதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது மத்திய அரசு. அதன்படி அந்த நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா முக்கிய ஆலோசனை மேற்கொண்டு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடகாவில் ஹாட்ஸ்பாட் ஏரியாக்களை தவிர பிற பகுதிகளில் வரும் 20-ம் தேதி முதல் இரண்டு சக்கர வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்த அறிவிப்பு திரும்பப்பெற பட்டது. இதனால் முதலில் வெளியான அறிவிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், அதன் பின்னர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பெங்களூரில் உள்ள 32 கண்டெயின்மெண்ட் பகுதிகள், மாநிலத்தின் 8 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் ஓரளவு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் விவரம்;
- இரண்டு சக்கர வாகனங்களை இயக்கத் தடை; கார்களுக்கு பாஸ் இருந்தால் அனுமதி; புதிய பாஸ் தரப்படாது
- ஏப்.20-முதல் ஐடி துறைகளை சார்ந்தோர் 33% பேர் மட்டுமே அலுவலகங்களில் இருந்து பணியாற்றலாம்
- அரசு அலுவலகங்களில் 33 % பேர் மட்டும் பணியாற்றலாம்
- சலூன்கள், பொது போக்குவரத்து சேவைகள், மத வழிபாட்டு தலங்கள், மே 3 வரை திறக்கப்படாது
- ஏப்ரல் 20-க்கு பிறகும் கர்நாடகாவில் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு பயணம் செய்ய அனுமதியில்லை
- கர்நாடகாவில் ஏப்ரல் 20 முதல் கட்டுமானப்பணிகளை தொடரலாம், ஆனால் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி பணியிடத்தில் தங்க வேண்டும்
- புதிதாக கடைகள் திறக்க அனுமதி தரப்படாது
- ராமநகர், பெங்களூர் ஊரகம், பெங்களூர் நகரம் ஆகிய மூன்று பகுதிகளும் தொழிலாளர்கள் நலன் கருதி ஒரே மாவட்டமாக கருத்தில் கொள்ளப்படும்.
- முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்; முகக்கவசம் அணியாமல் வெளியே வர அனுமதியில்லை
- கர்நாடகாவில் பொதுவிடங்களில் எச்சில் துப்ப தடை
- கண்டெயின்மென்ட் பகுதிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவர்












Click it and Unblock the Notifications