ஹிஜாப் வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
பெங்களூர்: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.
கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர பியு கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதோடு மாணவ, மாணவியர் யூனிபார்ம் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக மாநில அரசும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. விசாரணை முடியும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 11 நாட்கள் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் மாணவிகள் தரப்பு ஹிஜாப் அணிவது மத உரிமைகளில் ஒன்று, இது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று வாதம் வைத்தது.
அதேபோல் யூனிபார்ம் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கல்லூரி கமிட்டிகளிடம் கொடுத்தது தவறு. ஹிஜாப் என்பது மத பழக்கங்களில் ஒன்று இல்லை என்று அரசு கூறியது தவறு என்று மாணவிகள் தரப்பு வாதம் வைத்தது. ஆனால் அரசு தரப்பு யூனிபார்ம் விதிகளை மாணவிகள் மதிக்க வேண்டும். யூனிபார்ம் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் கல்லூரி கமிட்டிக்கு உள்ளது.
இது மத அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது. சட்ட பிரிவு 25ன் கீழ் இதை கொண்டு வர முடியாது. உடுப்பியில் உள்ள பியு கல்லூரியில் 2013லேயே யூனிபார்ம் விதி கொண்டு வந்து அங்கு மாணவ, மாணவியர் யூனிபார்ம் அணிந்து வந்தனர். அதனால் அந்த நிலையே இனியும் தொடர வேண்டும் என்று வாதம் வைத்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications