மடாதிபதி மட்டும் சிக்கட்டும்..பாஜக 'தலைகள்' நிறைய மாட்டும்.. ரூ7 கோடி சீட்டிங் 'காவி' சைத்ரா பகீர்!
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவர்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறார் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி ரூ7 கோடி மோசடி செய்த இந்துத்துவா ஆக்டிவிஸ்ட் சைத்ரா குந்தாப்புரா.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே தொழிலதிபர்களிடம் போட்டியிட சீட் வாங்கி தருகிறேன் என வாக்குறுதி கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

கர்நாடகாவின் குந்தாப்புராவை சேர்ந்த கோவிந்தபாபு பூஜாரி, சட்டசபை தேர்தலில் பைந்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் என கூறிக் கொண்ட நபர்களிடம் ரூ7 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். இதனையடுத்து போலீசில் கோவிந்தபாபு பூஜாரி புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில்தான் இந்துத்துவா பிரமுகரான சர்ச்சை பெண் சைத்ரா குந்தாப்புரா சிக்கினார். கர்நாடகாவில் சைத்ராவின் பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. அவர் மீது வழக்குகளும் பாய்ந்திருந்தன. தற்போது ரூ7 கோடி மோசடியில் சைத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். அவருடைய கூட்டாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மடாதிபதி ஒருவர்தான் முக்கிய கூட்டாளி எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விசாரணைக்காக சைத்ரா நேற்று சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம், 'அந்த மடாதிபதி மட்டும் சிக்கட்டும்.. ரூ7 கோடியை பங்கு போட்ட பாஜக தலைவர்கள் எத்தனை பேர் மாட்டுவாங்கன்னு பாருங்க என மிரட்டிவிட்டுப் போனார். சைத்ராவின் இந்த பேட்டிதான் கர்நாடகா பாஜக தலைவர்களின் நிம்மதியை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications