அதிர்ந்த பெங்களூர்.. முதல்வர் போகும் முன் கழிவறையில் வெடிப்பொருட்கள் வைத்தது யார்? பரபர தகவல்
பெங்களூர்: பெங்களூர் கேஆர் மார்க்கெட்டில் உள்ள தனியார் பஸ் ஸ்டாண்ட் கழிவறைக்கு சென்ற ஒருவர் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் அடங்கிய பேக்கை வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்னேட்டர்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அது எப்படி சிக்கியது? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடங்களில் கலாசிபாளையம் ஒன்று. இங்கு கேஆர் மார்க்கெட், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவை அருகருகே அமைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தில் அதிக மக்கள் கூடுவார்கள்.

இந்நிலையில் தான் விரைவில் அங்கு முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்நிலையில் தான் கேஆர் மார்க்கெட் தனியார் பஸ் ஸ்டேண்ட்டில் உள்ள கழிவறையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. 6 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கழிவறையில் இருந்த பேக்கில் இருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பஸ் நிலையம், கழிவறை மற்றும் கேஆர் மார்க்கெட் உள்பட பல இடங்களில் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது வேறு எந்த இடத்திலும் வெடிபொருட்கள் கிடைக்கவில்லை. மேலும் இந்த வெடிப்பொருட்கள் எப்படி கழிவறைக்குள் சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதோடு பின்னணியில் பெரிய சதி ஏதேனும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் பேக்கை எடுத்து கொண்டு கழிவறைக்கு சென்றதும், அதன்பிறகு வெறும் கையுடன் வெளியே வந்ததும் தெரியவந்தது. அந்த நபர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் இந்த வெடிப்பொருட்கள் கழிவறையில் இருப்பது எப்படி தெரியவந்தது? என்பது பற்றிய பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பஸ் ஸ்டேண்ட்டின் கழிவறை பொறுப்பாளராக சாத்விந்தர் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது கைவிடப்பட்ட பேக்கை அவர் பார்த்தார். இதுபற்றி உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பேக்கை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதன் உள்ளே ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பெங்களூர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் கூறுகையில், ‛‛கைவிடப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் குவாரியில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே இருப்பது போல் தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக குச்சிகளை எடுத்துச் சென்ற நபர், காவல்துறையினரின் வருகையால் கவலைப்பட்டு, அவற்றை கழிப்பறையில் கைவிட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். நாங்கள் அந்த நபரைத் தேடி வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications