கடைசி நிமிடம்.. ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய 32 பேர்! கர்நாடகா வாலிபால் அணியின் அதிர்ஷ்டம் இதுதான்!
பெங்களூர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான வாலிபால் அணியை சேர்ந்த 32 பேர் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் பாஹானகா என்ற இடத்தில் சரக்கு ரயிலுடன் மோதி தடம்புரண்டது. மேலும் இந்த ரயில் பெட்டி அடுத்த டிராக்கில் விழுந்த நிலையில் அதில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது.

ஒரே இடத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ரயில் விபத்தில் 294 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் மற்றும் காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பியவர்கள் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது ரயில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டசமாக கர்நாடகாவை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் அணி மொத்தமாக தப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 16 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டி மேற்கு வங்க மாநிலம் சந்தான்நகரில் மே 27 ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த ஆண், பெண்கள் என 2 அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டிக்காக வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 14 பெண்கள், 18 ஆண்கள் என மொத்தம் 32 பேர் மேற்கு வங்காளத்துக்கு சென்றனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 2ம் தேதி ஷாலிமர்-சென்னை கோரமண்டல் அதிவிரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால் சிலரது டிக்கெட் என்பது கண்பார்ம் ஆகவில்லை. இதனால் ரயில் நிலையம் சென்றவர்கள் பயணத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் தான் அந்த ரயில் ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கியது. இதன்மூலம் கர்நாடகா மாநில 16 வயதுக்கு உட்பட்ட வாலிபால் அணி வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 32 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதுபற்றி அணிகளின் தலைமை பயிற்சியாளர் மகாதேவ மூர்த்தி கூறுகையில், ‛‛நாங்கள் 5 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணிக்க இருந்தோம். ஆனால் சிலரது டிக்கெட் கண்பார்ம் ஆகவில்லை. இதனால் பயணத்தை ரத்து செய்தோம். இப்போது அதிர்ஷ்டசாலி என நினைக்கிறோம்'' என்றார். இதுபற்றி பெண்கள் அணியின் பயிற்சியாளர் மம்தா செட்டி கூறுகையில், ‛‛நாங்கள் ரயிலில் ஏறியிருந்தால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை'' என்றார். இதுபற்றி இந்த சம்பவத்தை நினைத்து கூட பார்க்கவில்லை.
இதையடுத்து கர்நாடகா மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரயில்வே ஊழியர் மேகனா (விளையாட்டு கோட்டாவில் பணிக்கு சேர்ந்தவர்) பெண்கள் அணியை தனது வீட்டில் தங்க வைத்தார். மேலும் கர்நாடகா ஆண்கள் அணியை அவரது நண்பரான ஆந்திராவை சேர்ந்த சாய்நாத் (இவரும் விளையாட்டு கோட்டாவில் பணிக்கு சேர்ந்தவர்) இல்லத்தில் தங்க வைத்தார். அதன்பிறகு எமர்ஜென்சி கோட்டாவில் ஹவுரா-பெங்களூர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால் அந்த ரயிலும் கேன்சல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கர்நாடகா அரசு உதவியோடு விமானத்தில் அங்கிருந்து ஊர் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications