அதெப்படி? பள்ளியில் நேராக 5ம் வகுப்பில் சேர்ந்த சித்தராமையா! கர்நாடகா புது முதல்வரின் சுவாரசியம்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக இன்று சித்தராமையா பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் சித்தராமையா பள்ளி படிப்பை நேரடியாக 5ம் வகுப்பில் இருந்து துவங்கினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது உண்மை தான். இதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த அமோக வெற்றியை பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக வெறும் 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று மதியம் பதவியேற்கிறார். இவர் கடந்த 2013-2018 ல் கர்நாடகா முதல்வராக இருந்த நிலையில் இன்று மீண்டும் 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.
இந்நிலையில் தான் சித்தராமையா பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் தான் சித்தராமையா தனது பள்ளிப்படிப்பை நேரடியாக 5ம் வகுப்பில் இருந்து துவங்கியது தெரியவந்துள்ளது. அதாவது சித்தராமையா மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சித்தராமயணஹூன்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறுவயதில் நாட்டுப்புற கலைகளில் ஆர்வமாக இருந்தார். இதனால் வீர மக்களா குனிதா எனும் கலைக்குழுவில் இணைந்து நடனம் கற்றார். இந்த வேளையில் அவருடன் இருந்த பலரும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் சித்தராமையாவும் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது.
மேலும் நடனம் சொல்லி கொடுத்த நஞ்சேகவுடா என்பவர் அவ்வப்போது இவர்களுக்கு கன்னடம் மற்றும் கணக்கு பாடங்களை சொல்லி கொடுத்துள்ளார். இதனை அவர்கள் கற்றுக்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே தான் நஞ்சேகவுடாவுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேறு இடத்துக்கு சென்றார். சித்தராமையா நடனம் கற்றுகொள்வதையும், நஞ்சேகவுடாவிடம் பாடம் கற்றுக்கொள்வதையும் நிறுத்தினார்.
இதையடுத்து சித்தராமையா தனது தந்தையுடன் சேர்ந்து எருமை மாடுகள் மேய்க்க தொடங்கினர். இந்த சமயத்தில் ஹெட்மாஸ்டர் ராஜப்பா என்பவர் சித்தராமையாவின் தந்தையான சித்தராமே கவுடாவை சந்தித்து சித்தராமையாவை பள்ளிக்கு அனுப்பும்படி கூறினார். மேலும் அவர் சித்தராமையாவிடம் பேசினார். அப்போது சித்தராமையா அடிப்படை கணக்கு மற்றும் கன்னடம் கற்று தேர்ந்து இருந்தார். இதற்கு நஞ்சேகவுடா கொடுத்த பயிற்சி தான் காரணம்.

இதையடுத்து அவர் நேரடியாக சித்தராமையாவை 5ம் வகுப்பில் சேர்த்தார். இதையடுத்து 10ம் வகுப்பு வரை சித்தராமையா முதல் மாணவராக திகழ்ந்தார். பள்ளி படிப்பை முடித்த சித்தராமையா பிஎஸ்சி டிகிரி முடித்தார். அதன்பிறகு சட்டப்படிப்பை முடித்த வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். முன்னதாக சித்தராமையா சட்டப்படிப்பை படிக்க அவரது தந்தை சித்தராமே கவுடா விரும்பவில்லை.
மாறாக தன்னுடன் விவசாயம் செய்ய வேண்டும் என சித்தராமையாவை அவரது தந்தை சித்தராமே கவுடா வலியுத்தினார். ஆனால் சித்தராமையா விடவில்லை. கிராம பெரியவர்களை அழைத்து வந்து என்னை சட்டப்படிப்பு படிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும் என கூறவே சித்தராமையாவின் தந்தை சித்தராமேகேவுடா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் சட்டப்படிப்பை முடித்தார். இந்த வேளையில் அவர் அரசியலில் நுழைந்து கர்நாடகா முதல்வராக இன்று 2வது முறையாக பதவியேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications