விதான சவுதா, சின்னசாமி கிரிக்கெட் மைதானம் உருவாக்கியதே தமிழர்கள்தான்! பெங்களூர் வரலாறு தெரியுமா?
பெங்களூர்: கறுப்பர்கள், குடிசைவாசிகள் என எத்தனையோ ஏளனப் பேச்சுக்களை கன்னட அமைப்பினர் பலர் தமிழர்களை நோக்கி சமூக வலைத்தளங்களில் வீசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் எந்த ஆர்சிபிக்காக தமிழர்களை ஏளனம் செய்கிறார்களோ அந்த ஆர்சிபியின் ஹோம் கிரவுண்ட் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் ஒரு தமிழரின் பெயரை தாங்கியது, ஒரு தமிழரின் கடும் முயற்சியால் கட்டப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடக சட்டசபை இயங்கும் விதான சவுதாவே தஞ்சாவூர் கட்டிட கலையுடன் அமைந்ததுதான். இதை கட்டியதும் பி.ஆர்.மாணிக்கம் என்ற தமிழர்தான்.
பெங்களூரின் அடையாளங்களை உருவாக்கியதே தமிழர்கள்தான் என்பது தமிழர்களில் பலருக்கே தெரியாது. தமிழர் பெருமை தமிழனுக்கே தெரியாமல் இருப்பது வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம். எனவே, பெங்களூரின் இவ்விரு பெரும், அடையாளங்கள் தமிழர்களால் எப்படி உருவானது என்பதை ஒரு ரீவைண்ட் செய்து பார்த்திவிடுவோமா..

யார் இந்த சின்னசாமி முதலியார்?
சின்னசாமி முதலியார், வட ஆற்காடு மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழர். 1900-ஆம் ஆண்டு மைசூர் மாநிலத்தில் (அப்போது கர்நாடகா என்ற பெயர் இல்லை) மண்டியா பகுதியில், பிறந்தார். தொழில்முறை வழக்கறிஞராகவும், கிரிக்கெட் நிர்வாகியாகவும் செயல்பட்டார். 1933-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட மைசூர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) நிறுவுநர்களில் ஒருவர்.
1953 முதல் 1978 வரை செயலாளராகவும், 1978 முதல் 1990 வரை தலைவராகவும் இருந்தார் (அப்பவே தமிழன் அங்கு அப்படி!!). 1969-ஆம் ஆண்டு, பெங்களூரு நகரின் முக்கியமான எம்ஜி சாலையில் அரசு நிலத்தை குத்தகைக்கு பெறுவதற்காக, கர்நாடக அரசிடம் தொடர்ந்து பேசி, அரசின் அனுமதி பெறும் வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.
கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட, ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகம் கொண்ட, தனது சொந்த இடத்தை கொடுத்து, அந்த இடத்தை மேலும் விரிவுபடுத்த, தமிழ், கன்னட தொழிலதிபர்கள் போன்ற பலரிடம் உதவி பெற்றார். இப்படி பாடுபட்டுதான், இந்த நிலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டும் திட்டத்தை துவக்கினார். 1969 அடிக்கல் நாட்டப்பட்டு மைதானம் கட்டப்பட்டது. தற்போது அரசுக்கு சொந்தமாக உள்ளது.

மைதானம் கட்டுவதற்கான நிதி திரட்டல், கட்டுமான மேற்பார்வை, அரசு அனுமதிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் என அனைத்து நிலைகளிலும் நேரடியாக ஈடுபட்டார். அவரது நிர்வாகத் திறனும், உறுதியும் காரணமாகவே இந்த மைதானம் உருவாக முடிந்தது. 1974-75-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் போது, இந்த மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்தும் அந்தஸ்து வழங்கப்பட்டது. 1982-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள், 1996 உலகக் கோப்பை போட்டிகள், IPL தொடர், RCB அணியின் முகாம் என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகவும் (1977-1980), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இருந்தவர்தான் சின்னசாமி முதலியார். மைதானம் உருவாக்கத்தில் அவரது தீர்க்கதரிசனம், நிர்வாகத் திறன், கிரிக்கெட் வளர்ச்சிக்காக செய்த உழைப்பு காரணமாகவே, இன்று இந்த மைதானம் உலகளவில் புகழ்பெற்றதாக உள்ளது. ஆனால் ஒரு தமிழரின் தன்னிகரற்ற உழைப்பும், திட்டமிடலும் இருப்பது தெரியாமல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமெண்ட்ரியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் சின்ன மைதானம் என ரைமிங் காமெடி செய்வதாக நினைத்து வர்ணனையாளர்கள் பேசுவதை கேட்கும்போது சின்னசாமி குடும்பம் என்ன நினைக்கும்?
விதான சவுதா கட்டிய தமிழர்கள்
விதான சவுதா (Vidhana Soudha) என்பது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக கட்டிடமாகும். இது 1951-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை கர்நாடகாவின் முதலாவது முதல்வர் கெங்கல் ஹனுமந்தைய்யா (Kengal Hanumanthaiah) ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. வெளிநாட்டு குழு பெங்களூர் வந்திருந்தபோது, சட்டசபை கட்டிடம் கூட சரியில்லாமல் இருப்பதை கேலியாக பேசியதால் வெள்ளையர்களுக்கே பதிலடி கொடுக்கும் வகையில் பிரமாண்ட, அழகுள்ள கட்டிடம் அமைக்க முடிவு செய்த கெங்கல் ஹனுமந்தைய்யா, கர்நாடக மானம் காக்க, தேர்வு செய்தது ஒரு தமிழரை. அவர் பெயர் பி.ஆர்.மாணிக்கம்.

விதான சவுதா கட்ட மாணிக்கம் ஏன் தேர்வு?
ஆம்.. விதான சவுதா கட்டிடத்தின் தலைமைப் பொறியாளராக (Chief Engineer) மாணிக்கம் (B.R. Manickam) தேர்வு செய்யப்பட்டார். மாணிக்கம் ஒரு திறமையான தமிழர் பொறியாளர். அவருக்கு அரசு கட்டிடங்கள், பெரிய திட்டங்கள் குறித்து சிறந்த அனுபவமும், திறமையும் இருந்தது. அவரது கட்டிடக் கலை அறிவும், நிர்வாக திறமையும் காரணமாகவே, ஹனுமந்தைய்யா அவரை இந்த மிகப்பெரிய திட்டத்துக்குத் தேர்வு செய்தார். மேலும், மாணிக்கம் முன்பு மைசூர் அரசின் பல முக்கிய கட்டிடப் பணிகளிலும் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

விதான சவுதா வரலாறு
விதான சவுதா கட்டிடத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டது. விதான சவுதா கட்டிடத்தின் வடிவமைப்பு, இந்திய மற்றும் திராவிடக் கட்டிடக் கலையின் கலவையாகும். மாணிக்கம் தலைமையில், 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சிற்பிகள், பொறியாளர்கள் பணியாற்றினர். கட்டிடத்தின் முழு வேலை 1956-இல் முடிந்தது. இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சட்டமன்றக் கட்டிடங்களில் ஒன்றாகும்.
இங்கு, சட்டசபை, மேலவை, தலைமைச் செயலகம், அமைச்சர்களின் அறைகள், முதல்வர் அறை, பேங்க்வெட் ஹால் உள்ளிட்ட மொத்த மக்கள் சக்தி பீடமும் ஒருங்கே அமைந்துள்ளது. விதான சவுதா கட்டுமானத்தில் பளிங்கு கற்கள், கிரானைட் போன்ற உயர்தர பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
விதான சவுதா கட்டிடத்தின் உயரம் 150 அடி. கட்டிடத்தின் மையத்தில் பெரிய கோபுரம், அதன் மேல் இந்திய தேசிய சின்னம் (அசோக சிங்கம்) அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முன்புறத்தில் "Government Work is God's Work" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. விதான சவுதாவின் பரப்பளவு, அதிகாரப்பூர்வ தரவுகள்படி, 5,05,505 சதுர அடி. சில குறிப்புகள் 7 லட்சம் சதுர அடி வரை கூட இருக்கலாம் என்கின்றன.
கர்நாடக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அரச நிர்வாகம் நடைபெறும் இந்த இடத்தை உருவாக்கி கொடுத்தது மாணிக்கம் என்ற தமிழர் என்பது பெருமையல்லவா. தஞ்சை கட்டிட கலையை பிரதிபலிக்கும் குவிந்த தாமரை மொட்டுக்கள் இக்கட்டிடத்தின் மீது இருப்பதை ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு காண வேண்டுமா இல்லையா?

தமிழனுக்கே தெரியாத வரலாறு
பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் வளர்ச்சியில் இதுபோன்ற பல தமிழர்களின் பங்களிப்புகள் உள்ளன. இந்த வரலாறுகள் இப்போதுள்ள தமிழ் தலைமுறைக்கு தெரியாமலே போய்விட்டன. இருப்பினும் பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான, முனைவர் எஸ்.டி.குமார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள், இதை நினைவுபடுத்தும் கடமையை அவ்வப்போது செய்துகொண்டேதான் உள்ளனர்.
பி.ஆர்.மாணிக்கம் மறைந்துவிட்ட நிலையில், அவரது 60வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தில் எஸ்.டி.குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாணிக்கத்தின் மகன் பி. எம். சீனிவாசன். அவரது துணைவியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பெங்களூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏயும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதேபோல சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியதில் சின்னசாமி முதலியார் ஆற்றிய பங்களிப்பையும் சமீபத்தில் நடைபெற்ற ஆர்சிபி கூட்ட நெரிசல் சம்பவத்தையொட்டிய இரங்கல் அறிக்கையின்போது எஸ்.டி.குமார் சுட்டிக் காட்டியிருந்தார்.
இப்படியாக, ஒரு சில தமிழர் ஆர்வலர்கள் அவ்வப்போது பெங்களூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டி, ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினாலும், கன்னடர்களும் சேர்ந்து இதை முன்னெடுக்கும்போதுதான், உணரும்போதுதான், இரு கை தட்டிய ஓசையாக அது மாறும். இவ்விரு மொழிக் குடும்பமும் பிணக்கின்றி வாழும்.












Click it and Unblock the Notifications