கர்நாடக தேர்தல்: கியரை மாற்றிய ராகுல் காந்தி.. பெங்களூரில் ஆலோசனை.. காங்கிரஸ் வெற்றி உறுதியென சூளுரை
பெங்களூர்: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛‛கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கை உள்ளதாகவும், தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' என்றும் கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. குறிப்பாக பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் தனது ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கு கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சினை தான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இனி நடைபெற உள்ள பிற மாநில சட்டசபை தேர்தல்களில் உட்கட்சி பூசலை தவிர்த்து வெற்றி பெறுவதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு
அந்த வகையில் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல்காந்தி பேச்சு
பெங்களூரில் இன்று ராகுல்காந்தி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் அவர் கட்சி தலைவர்களை ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதுதொடர்பாக கட்சி தலைவர்களுக்கு ராகுல்காந்தி ஆலோசனை வழங்கி பேசினார்.

150 இடங்களில் வெற்றி
‛‛கர்நாடகம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாநிலமாக உள்ளது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 150 இடங்களில்(மொத்தம் 224) வெற்றி பெற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பதில் சித்தராமையா, டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கே உள்பட அனைத்து தலைவர்களுக்கும் பங்கு உள்ளது.

நம்பிக்கை உள்ளது
இந்த தேர்தலில் நாம் இளைஞர், பெண்களின் ஓட்டுகளை கவர வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதோடு, கட்சியிலும் அதிகளவில் சேர்க்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் பாஜகவினர் இங்குள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை சிதைத்து விட்டனர்.

பொருளாதாரம் வீழ்ச்சி
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவை நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன. நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இவைதான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை. பாஜக நினைத்தாலும் தற்போது நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளை அழித்துள்ளனர்.

40 சதவீத கமிஷன் ஆட்சி
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசுகிறார். அவர் கர்நாடகம் வந்து ஊழல் பற்றி பேசினால் மக்கள் அவரை பார்த்து சிரிப்பார்கள். ஏனென்றால் கர்நாடகத்தில் பாஜக அரசு என்பது 40 சதவீத கமிஷன் ஆட்சியை நடத்துகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications