இந்தியில் தான் பேசுவேன்.. கன்னடம் பேசமாட்டேன்.. கஸ்டமருடன் சண்டையிட்ட SBI வங்கி மேலாளர் இடமாற்றம்
பெங்களூர்: ‛‛நான் இந்தியில் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்'' என்று பெங்களூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் மேலாளர் வாடிக்கையாளரிடம் கூறியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் அவருக்கு கர்நாடகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பிஐ வருத்தம் தெரிவித்த நிலையில் இரவோடு இரவாக பெண் மேலாளரை பணி இடமாற்றம் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை உள்ளது. இந்நிலையில் தான் இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.

அதில் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கும், இன்னொரு நபருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அதில் பெண் மேலாளர் ஆங்கிலத்தில் பேசுகிறார். மாறாக எதிர்புறத்தில் உள்ள நபர் கன்னடத்தில் பேசுகிறார்.
அந்த நபர், ‛‛கர்நாடகாவில் வங்கியின் கிளை உள்ளது. இதனால் உள்ளூர் மொழியான கன்னடத்தில் வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும்'' என்று கூறுகிறார். அதற்கு அந்த வங்கி ஊழியர், ‛‛கன்னடத்தில் பேச வேண்டியது கட்டாயம் என்று உள்ளதா? கன்னடத்தில் எல்லாம் பேச மாட்டேன்'' என்று கூறுகிறார். அதற்கு கன்னடம் பேசாவிட்டால் எந்த மொழி பேசுவீர்கள் என்று கேட்டதற்கு இந்தி என்று பெண் மேலாளர் கூறுகிறார். அதுமட்டுமின்றி ஒருபோதும் கன்னடம் பேசமாட்டேன் என்று கூறி அருகே உள்ள அறைக்கு செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். புதிதாக பணியிடமாறுதல் பெற்று வந்தாலும் கூட உள்ளூர் மொழியில் பேச முயற்சிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் இன்னும் சிலர், ‛‛அந்த வங்கி ஊழியருக்கு கன்னடத்தை புரிந்து கொள்ளும் திறமை உள்ளது. கன்னடத்தில் கேள்வி கேட்க அவர் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார். இதனால் அவர் கன்னடத்தை வேண்டும் என்றே புறக்கணிக்கிறார்''என்று கூறி வருகின்றனர். மேலும் பலரும் அந்த வீடியோவை எஸ்பிஐ மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர்களை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து இந்த ஊழியர் இந்தியை திணிக்கிறார். வாடிக்கையாளரிடம் தவறாக நடக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பிய நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஸ்டேட் வங்கி சார்பில், ‛‛தெற்கு பெங்களூரின் சூர்யாநகரில் அமைந்துள்ள கிளையில் சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்து கொள்கிறோம். இந்த சம்பவம் குறித்து எவலுவேஷன் செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜீரோ சகிப்புத்தன்மையை பின்பற்றி வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கன்னடம் பேசமாட்டேன் என்று கூறிய எஸ்பிஐயின் பெண் மேலாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேசிய வீடியோ நேற்று இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இது சர்ச்சையை கிளப்பலாம் என்று அறிந்த எஸ்பிஐ வங்கி உயரதிகாரிகள் அந்த பெண் மேலாளரை இரவோடு இரவாக பணியிடமாற்றம் செய்துள்ளனர். குறிப்பாக கர்நாடகாவை விட்டுவிட்டு வேறு மாநிலத்துக்கு அவரை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர் எந்த மாநிலத்தில் எந்த கிளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
மேலும் இதனை கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் உள்ள எஸ்பிஐ கிளையின் மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்தோடு, மக்களை அலட்சியப்படுத்தியது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை இடமாற்றம் செய்த எஸ்பிஐயின் விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த விவகாரம் இப்போது முடித்து வைக்கப்பட்டதாக எடுத்து கொள்ளலாம். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். உள்ளூர் மொழியில் பேச எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் இந்தியா முழுதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாசார மற்றும் மொழி உணர்வு பற்றி பயிற்சி வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications