திங்கள்கிழமையே பெரும்பான்மையை நிரூபிக்கப்போகிறேன்.. எடியூரப்பா அதிரடி
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் ஜூலை 29ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக அம்மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டசபையில் நடந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்தது.
இதையடுத்து கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை சுமார் 10 மணியளவில் பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதன்பின்னர் இன்றே முதல்வரவாக பதவியேற்க போவதாக எடியூரப்பா அறிவித்தார். இதன்படி இன்று மாலை 6.30 மணியளவில், கர்நாடக ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடகாவின் 25வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்றபின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகா சட்டசபையில் ஜூலை 29ம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன். பெரும்பான்மையை நிரூபித்தவுடன் சட்டசபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.