நாளைக்குள் வேட்பாளர் லிஸ்ட் வேணும்.. ஜெகதீஷ் ஷெட்டர் கொடுத்த இறுதி வார்னிங்.. பாஜகவிற்கு நெருக்கடி
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் இறங்கியுள்ள நிலையில், நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிற்கு இறுதி கெடு விதித்துள்ளார்.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தக்கல் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டாலும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா இரு கட்டங்களாக 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.
பாரதிய ஜனதாவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 52 வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பியுள்ளனர். முக்கியமாக அமைச்சராக இருக்கும் எஸ்.அங்கார், எம்.எல்.சியாக இருக்கும் ஆர்.சங்கர், லட்சுமண் சவதி எம்.எல்.சி. ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர்.
கர்நாடக பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என்று கட்சி மேலிடம் கூறியதாக தெரிகிறது. கட்சி மேலிட தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடும்படி ஜெகதீஷ் ஷெட்டரிடம் சொல்லியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜெகதீஷ் ஷெட்டர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தனியாக போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். இதனால், ஜெகதீஷ் ஷெட்டரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மேல் மட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர். ஜெகதீஷ் ஷெட்டருக்கு போட்டியிட 99 சதவீதம் வய்ப்பு அளிக்கப்படும் என்று எடியூரப்பாவும் உறுதி அளித்தார். இதனால் சற்று சமாதானம் அடைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் தற்போது பாஜக விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், கட்சியின் தலைவர்களை சந்தித்த போது சாதகமான பதில் கிடைத்தது. மூத்த தலைவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். நாளை காலை வரை காத்திருப்பேன். மாநிலம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். என்னை ஒரு முடிவை எடுக்குமாறு அவர்கள் கூறுகிறார்கள்.
நான் பாசிட்டிவ் ஆக சிந்திக்கும் நபர். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்கும் போது 2 நாட்கள் பொறுத்து இருப்பேன்.. அதற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினேன். பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்" என்றார்.











Click it and Unblock the Notifications