“அந்த 4.8 கோடி பணத்தை விட்ருங்க”.. ஐஏஎஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்! ‘ஷாக்’ சம்பவம்!
பெங்களூர்: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பாஜக வேட்பாளர் சுதாகருக்கு சொந்தமான ரூ. 4.8 கோடி பணம் கைப்பற்ற்றப்பட்ட நிலையில், அந்த பணத்தை விடுவிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் சுதாகர் உதவி கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4.8 கோடியை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.
பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட ரூபாய் 4.8 கோடி பணம், பாஜக சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் கே.சுதாகருக்கு சொந்தமான என விசாரணையில் தெரியவந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகாரையடுத்து அவர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 4.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பிடிபட்ட பணத்தை விடுவிக்கும் படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் முட்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூர் மாதிரி நடத்தை விதிமுறை அதிகாரியான முனிஷ் முட்கல் ஐ.ஏ.எஸ்ஸுக்கு, பாஜக வேட்பாளர் சுதாகரின் தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்துள்ளது. 4.8 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உதவி கேட்டு முனிஷுக்கு வாட்ஸ்அப்பில் மூன்று செய்திகளை அனுப்பியுள்ளார் சுதகர்.
சுதாகர், அந்தப் பணம் போகட்டும் என்று கூறியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதாவது, அதை பிடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் என்ற வகையில் சுதாகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் முட்கல் போலீசில் புகார் அளித்த நிலையில், மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளருக்கு சொந்தமாண ரூ. 4.8 கோடி பணம் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த பணத்தை விடுவிக்க, பாஜக வேட்பாளரே நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications