‛விஷப்பாம்பு’.. மோடி பற்றி வார்த்தையை விட்ட கார்கே! கடும் எதிர்ப்பால் பரபர விளக்கம்! முழுவிபரம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பு போன்றவர் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய நிலையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சர்சசையாக மாறிய நிலையில் மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறார். மேலும் இது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலமாகும். இதனால் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு வருகிறார்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைத்து கட்சி பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதோடு மாநிலத்தில் தீவிர பிரசாரத்திலும் மல்லிகார்ஜூன கார்கே ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஹைதரபாத்-கர்நாடகா மாவட்டங்களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் கதக் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே,‛‛ பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பை போன்றவர். அவர் விஷம் உள்ளவரா, இல்லையா என்பதை பரிசோதிக்கும் வகையில் அவரை தீண்டினால் இறந்துவிடுவீர்கள்'' என பொருள்படும்படி பேசினார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடியை மல்லிகார்ஜூன கார்கே அவமதிப்பு செய்ததாக பாஜகவினர் விமர்சனம் செய்தார். இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‛‛நான் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு சொல்லவில்லை. பாஜகவை தான் விமர்சித்தேன். பாஜகவின் கொள்கை தான் விஷப்பாம்பு போன்றது'' என பேசியதாக கூறினார். இருப்பினும் எதிர்ப்பு மட்டும் குறையவேயில்லை.

இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே மற்றொரு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛எனது கருத்து தவறாக கருதப்பட்டு யாரையாவது புண்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். பாஜகவுக்கு எங்களுக்கும் கருத்தியல் ரீதியிலான வேறுபாடுகள் உள்ளன. ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்தம் என்பது விஷம் போன்றது. அதனை பிரதமருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததாக கூறி வருகின்றனர். யாரையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications